கவிதைகள்

படைத்தவன் ஏற்கான்!… கவிதை… ஜெயராமசர்மா

அஃறிணை உயிர்கள் அழுவதை எவரும்
அகத்தால் ஏற்றிட நினைப்பதே யில்லை
அஃறிணை உயர்திணை என்றுமே பாரா
அனைத்தும் உயிரென நினைப்பவர் ஞானியர்

எல்லாம் சிவமயம் என்பதே தத்துவம்
ஏற்றந் தாழ்வு பார்த்திடார் ஞானியர்
அவர்கள் நோக்கில் அனைத்தும் சமமே
சலனம் இல்லா மனத்தினர் ஞானியர்

உயிர்கள் அனைத்திலும் இறைவன் உள்ளான்
இறைவன் இல்லா இடமே இல்லை
எல்லா உயிர்களும் இறைவனின் படைப்பே
தொல்லை கொடுத்தால் இறைவன் பொறுக்கான்

உயிர்களை வதைப்பதும் வதைப்பதைச் சுவைப்பதும்
ஆறறி வுடையோர் எனும் பெயருடையார்
ஒருவரை ஒருவர் நேசித்தல் அவசியம்
என்பதே ஓங்கி ஒலித்திடும் தத்துவம்

ஆழிசூழ் உலகில் இருக்கும் உயிர்களை
அழிப்பதும் வதைப்பதும் அஹிம்சை ஆகா
வேற்றுமை காட்டி வெட்டி வதைப்பதை
நாட்டிலே வாழுவார் விட்டிடல் வேண்டும்

பலியின் பெயரால் உயிரைப் பறிப்பதை
படைத்தவன் எப்பவும் ஏற்றிட மாட்டான்
படைத்தவன் பெயரினைச் சாதகம் ஆக்கி
பலியிடும் எண்ணத்தைப் படைத்தவன் ஏற்கான் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button