இலங்கை

தமிழர்களும் சிங்களவர்களும் இன ரீதியில் பொதுவான மூலத்தைக் கொண்டவர்களே;  சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு

இலங்கையில் உள்ள சிங்களவர்களும் தமிழர்களும் இன ரீதியாக ஒரு பொதுவான மூலத்தைக் கொண்டவர்கள் என்பதிலும், எமது இரு மொழிகளினால் மட்டுமே நாம் வேறுபடுகிறோம் என்பதிலும் சந்தேகமில்லை. இலங்கையர்களாகிய நாம் இன ரீதியில் எமது பொதுவான தன்மையை உணர்ந்து, ‘ஒற்றையாட்சி’ அரசியலமைப்புக்குப் பதிலாக ‘ஒருமித்த’ அரசியலமைப்பை நோக்கிப் பயணிக்கவேண்டிய தருணம் இதுவாகும். ‘ஒருமித்த’ அரசியலமைப்பானது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் முதலாம் பிரிவின்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கான சுயாட்சி உரிமையை வழங்கும் என தமிழ்மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘சமீபத்திய மரபணு ஆய்வுகள், குறிப்பாக கடந்த ஆண்டு Current Biology எனும் இதழில் வெளியான மரபணு வரிசை முறை ஆய்வானது இலங்கையில் உள்ள சிங்கள மக்கள் தென்னிந்திய மக்களுடன் வலுவான மரபணுத் தொடர்புகளைக் கொண்டிருப்பதைக் காண்பிக்கின்றனவா? அவ்வாறெனில், இன ரீதியாக சிங்களவர்களும் தமிழர்களும் ஒரே மரபணுத் தொடர்பைக் கொண்டவர்கள் என்பதும், அவர்கள் மொழியால் மட்டுமே வேறுபடுகிறார்கள் என்பதும் உண்மையா?’ என எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு அளித்திருக்கும் பதிலிலேயே விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது:

ஆம், நிச்சயமாக மரபணுத் தொடர்பு இருக்கிறது. சிங்கள வரலாற்று ஆசிரியர்கள், இலங்கையில் உள்ள தமிழர்களிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டுவதற்காக மகாவம்சம் மற்றும் ஏனைய ஆதாரங்களின் அடிப்படையில் சிங்களவர்களுக்குப் பிரத்தியேகமான வட இந்திய ஆரிய மூலம் இருப்பதாகக் கூறிவந்தனர்.

ஆனால் நவீன மரபணுச் சான்றுகள் இதுவரை அவர்களால் முன்வைக்கப்பட்ட தவறான கண்டுபிடிப்புகளை ஆதரிக்கவில்லை. உண்மையில் விஜயனும் அவனது 700 தோழர்களும் அவனுடைய தந்தையால் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டதாகக் கூறப்படும் கதைக்கு இணையான குறிப்புகள் எவையும் வட இந்திய வரலாற்று நூல்களில் இல்லை. எனவே இந்தக் கதை மத நோக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு புனைவாகும்.

மகாவம்சம் என்பது ஒரு வரலாற்று ஆவணம் அல்ல. மாறாக அது பௌத்த மதத்தை மேன்மைப்படுத்துவதற்காக எழுதப்பட்ட ஒரு புனைவு என்று நாம் நீண்டகாலமாகக் கூறிவருகிறோம். மகாவம்சத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் முழு வரலாற்று விவரிப்பையும் பௌத்த வழிபாட்டின் பின்னணியில் சித்தரிக்கும் வகையில் முடிவடைகிறது.

இலங்கையில் பௌத்த மதத்தை நிறுவுவதற்காகவும், அதன் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காகவுமே மகாநாம தேரரினால் மகாவம்சம் இயற்றப்பட்டிருக்கிறது. எனவே அதில் கூறப்பட்டுள்ள விடயங்களை வேதவாக்காக எடுத்துக்கொள்ளாமல், அரசர்களின் வரலாறு உள்ளிட்ட புறம்பான சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தவேண்டும்.

மகாவம்சம் எழுதப்பட்ட காலத்தில் சிங்கள மொழி இருக்கவில்லை. ஆகையினாலேயே அது பாலி மொழியில் எழுதப்பட்டது. அக்கால மக்களின் மொழியாகத் தமிழ் இருந்தது. தேவநம்பியதீசன், பண்டுகாபயன் மற்றும் துட்டகைமுனு ஆகிய மன்னர்களின் மொழி கூட தமிழ் தான். துட்டகைமுனு தமிழ் பேசும் பௌத்தராக இருந்தார். எல்லாளன் தமிழ் பேசும் சைவராக இருந்தார்.

அதேவேளை வட, கிழக்கு தமிழ் வம்சாவளியை 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து வந்ததாகக் கண்டறியமுடியும். ஆனால் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவின் மதுரையிலிருந்து தமிழ் பிராமணர்கள் இங்கு வந்து, உள்ளுர் பெண்களைத் திருமணம் செய்து, தம்மை சிங்களவர்களாக அடையாளப்படுத்திக்கொண்டு குடியேறியது எத்தனை சிங்களவர்களுக்குத் தெரியும்?

இலங்கையில் உள்ள சிங்களவர்களும் தமிழர்களும் இன ரீதியாக ஒரு பொதுவான மூலத்தைக் கொண்டவர்கள் என்பதிலும், எமது இரு மொழிகளினால் மட்டுமே நாம் வேறுபடுகிறோம் என்பதிலும் சந்தேகமில்லை. நான் 1950 களின் ஆரம்பத்தில் கொழும்பு ரோயல் கல்லூரியில் பயின்ற வேளையில், கீழ்நாட்டு சிங்களவர்கள், மேல்நாட்டு சிங்களவர்கள், யாழ்ப்பாணத் தமிழர்கள், மட்டக்களப்புத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், ஏனைய இலங்கைத் தமிழர்கள், சோனகர், மலாயர்கள் மற்றும் ஏனைய முஸ்லிம்கள், பரங்கியர்கள் என சகல இனங்களைச் சேர்ந்த மாணவர்களும் ஒன்றாகப் படித்தோம். நாம் ஆங்கில மொழியாலும், எமது பாடசாலையினாலும் பிணைக்கப்பட்ட ஒரு குடும்பமாக இருந்தோம். எனினும் 1956 ஆம் ஆண்டு அரசியல் காரணங்களுக்காகக் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச்சட்டம் எமது ஒற்றுமையை மிகமோசமாகப் பாதித்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையர்களாகிய நாம் இன ரீதியில் எமது பொதுவான தன்மையை உணர்ந்து, ‘ஒற்றையாட்சி’ அரசியலமைப்புக்குப் பதிலாக ‘ஒருமித்த’ அரசியலமைப்பை நோக்கிப் பயணிக்கவேண்டிய தருணம் இதுவாகும். ‘ஒருமித்த’ அரசியலமைப்பானது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் முதலாம் பிரிவின்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கான சுயாட்சி உரிமையை வழங்கும். அதேவேளை சுயாட்சி தேவைப்படும் இவ்விரு தரப்பினரைத் தவிர ஏனைய மக்களின் உரிமைகளும் அந்த அரசியலமைப்பின் ஊடாக அங்கீகரிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *