இலங்கை

குற்றவாளிகளை கைது செய்யும் வரை போராட்டங்கள் ஓயாது -நாடு தழுவிய ரீதியில் சட்டத்தரணிகள் போராட்டம்!

நாடு தழுவிய ரீதியில் சட்டத்தரணிகள் இன்று நீதிமன்ற நடவடிக்கைகளைப் பகிஷ்கரித்துள்ளனர்.

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும், அவரது மனைவியும்  (14)  ஆயுத்தாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், துப்பாக்கிதாரிகளை  கைது செய்யக் கோரியும் இந்தப் பகிஷ்கரிப்பு இடம்பெற்றுவருகிறது.

இதேவேளை, யாழ்.குடாநாட்டிலுள்ள நீதிமன்றங்களில் சட்டத்தரணிகளும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்காரணமாக யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மல்லாகம், பருத்தித்துறை மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய நீதிமன்றங்களின் சட்டத்தரணிகளும் மன்றுக்கு வருகைதரவில்லை.

இதன் காரணமாக நீதிமன்ற வழக்குகள் சட்டத்தரணிகள் இன்றி அழைக்கப்பட்டதோடு, வழக்குகள் திகதியிடப்பட்டன.

இதேவேளை  நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியாவிலும் வழக்கறிஞர்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அத்தோடு திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகளும் (16) நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து முழுமையாக விலகிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் புண்ணியவதி துஷ்யந்தன்  தலைமையில் இன்று காலை ஒன்றுகூடிய சட்டத்தரணிகள், கறுப்புப் பட்டி அணிந்து தமது கண்டனங்களை வெளிப்படுத்தினர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த தலைவர் புண்ணியவதி துஷ்யந்தன்,

“சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டப் போராடும் ஒரு சட்டத்தரணிக்கே இந்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பது மிக மோசமான நிலைமையாகும். நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள இந்த ‘கொலை கலாசாரம்’ உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். எமது சக சட்டத்தரணியினதும் அவரது மனைவியினதும் படுகொலை ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும். குற்றவாளிகள் தராதரம் இன்றி உடனடியாகக் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதுவரை எமது போராட்டங்கள் ஓயாது,” எனத் தெரிவித்தார்.

கந்தளாய் நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகளும் பாரிய கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து சட்டத்தரணிகள் கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

சட்டத்தரணிகள் உட்பட பொதுமக்களுக்கும் பாதுகாப்பற்ற நிலைமை உருவாகும் சூழ்நிலையேற்பட்டுள்ளதன் காரணமாக துப்பாக்கிதாரிகள் கைதுசெய்யப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டட தொகுதிக்கு முன்பாக ஒன்றுகூடிய சட்டத்தரணிகள் அமைதிமுறையில் போராட்டத்தினை நடாத்தினார்கள்.

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் தியாகேஸ்வரன் தலைமையில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *