கவிதைகள்

இறையினைக் காண இயம்புவோம் மந்திரம் !… கவிதை… ஜெயராமசர்மா

கந்தனும் மந்திரம் கடம்பனும் மந்திரம்
கண்ணனும் மந்திரம் காளியும் மந்திரம்
சிவனும் மந்திரம் உமையும் மந்திரம்
தேர்ந்திடும் அனைத்தும் சிறந்திடு மந்திரம்
 
உண்மையும் மந்திரம் நன்மையும் மந்திரம்
கண்ணியம் மந்திரம் கருணை மந்திரம்
தர்மமும்  மந்திரம் தானமும் மந்திரம்
தாராளம் என்பதும் மந்திர மாகும்
 
வாழ்த்து மந்திரம் வணங்கு மந்திரம்
பணிவும் மந்திரம் பக்குவம் மந்திரம்
அன்பு மந்திரம் அணைப்பு மந்திரம்
அகத்தில் அமர்ந்தால் அனைத்தும் மந்திரம்
 
தூய்மை மந்திரம் தாய்மை மந்திரம்
வாய்மை மந்திரம் வளங்குதல் மந்திரம்
தாழ்மை மந்திரம் தயவு மந்திரம்
தரமாய் எண்ணிடும் அனைத்தும் மந்திரம்
 
புன்னகை மந்திரம் பூரிப்பு மந்திரம்
நன்னயம் என்னாளும் நல்லதோர் மந்திரம்
சொன்னது தூய்மையாய் இருந்திடல் மந்திரம்
நன்மையே நல்கிடும் அனைத்துமே மந்திரம்
 
அல்லாவும் மந்திரம் யேசுவும் மந்திரம்
அரனும் மந்திரம் அரியும் மந்திரம்
புத்தரும் மந்திரம் சத்தியம் மத்திரம் 
புனிதம் நிறையும் அனைத்துமே மந்திரம்
 
பிரணவம் என்பது மந்திர மாகும்
பெரும் பொருள் உணர்த்தும் தத்துவமாகும்
சரவண பவவென சொல்லிடும் வார்த்தை
சஞ்சலம் நீக்கிடும் என்பதை ஏற்கிறார் 
 
பிடிக்கும் சொற்களை எடுத்திடல் வேண்டும்
எடுக்கும் அனைத்தும் மந்திர மாகும்
அம்மா மந்திரம் அப்பா மந்திரம்
அறிவினை அளிக்கும் ஆசானும் மந்திரம்
 
துன்பம் துடைக்கும் அனைத்துமே மந்திரம்
தூய்மை காட்டும் அனைத்துமே மந்திரம்
துன்பம் துடைத்தால் தூய்மை ஒளிரும்
தூய்மை ஒளிர்ந்தால் ஆண்டவன் தெரிவான் 
 
மந்திரம் சொன்னால் மாவிருள் அகலும்
மாவிருள் அகன்றால் மாபொருள் தெரியும்
மாபொருள் என்பதே இறையே ஆகும்
இறையினைக் காண இயம்புவோம் மந்திரம் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண், அவுஸ்திரேலியா 

Loading

2 Comments

  1. எங்கும் எதிலும் நிறைந்திருப்பான் இறைவன் என்று சொல்லி வளர்த்தார்கள். எல்லாம் மந்திரம் என்னும் பொருள் புதிது. புதிது மட்டும் அல்ல. மந்திரம் நம்மோடு இருக்கிறது என்ற உணர்வை கொடுத்து இருக்கிறது இக்கவிதை. அருமை ஐயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button