இயர்போன் பயன்பாட்டில் மறைந்துள்ள அபாயங்கள்!

இயர்போன்கள் இன்று அலுவலக தொலைபேசி அழைப்புகள், பயண நேரம், உடற்பயிற்சி, இசை கேட்பது அல்லது தூங்குவதற்கு முன் காணொளி பார்ப்பது என அன்றாட வாழ்க்கையின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாக மாறிவிட்டன.
பலர் “குறைந்த சத்தத்தில் தான் கேட்கிறோம், அதனால் எந்த பிரச்சனையும் இல்லை” என நம்புகிறார்கள். ஆனால் இந்த எண்ணமே மெல்ல மெல்ல செவித்திறனை பாதிக்கும் ஒரு முக்கிய காரணமாக மாறி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இயர்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்தும்போது, காது கால்வாயில் வெப்பமும் ஈரப்பதமும் அதிகரிக்கிறது.
இது கிருமி மற்றும் பூஞ்சை வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்குகிறது. இதன் விளைவாக காது அரிப்பு, மெழுகு அதிகமாக படிதல், காது அடைப்பு மற்றும் மீண்டும் மீண்டும் ஏற்படும் காது நோய்த்தொற்றுகள் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம்.
வழக்கமான ஒலிபெருக்கு போல அல்லாமல், இயர்போன்கள் நேரடியாக காதுக்குள் வைக்கப்படுவதால் ஒலி அலைகள் செவிப்பறைக்கு மிகவும் அருகில் தாக்கம் செலுத்துகின்றது.
இதனால் நீண்ட நேரம் தொடர்ந்து கேட்கும்போது, அது குறைந்த சத்தத்தில் இருந்தாலும் கூட, உள் காதில் உள்ள மிகவும் நுண்மையான முடி செல்கள் (hair cells) அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. இந்த செல்கள் ஒருமுறை சேதமடைந்தால் மீண்டும் வளராது என்பதே கவலைக்குரிய உண்மை. இதன் காரணமாக படிப்படியாக செவித்திறன் இழப்பு, காது இரைச்சல் (tinnitus) மற்றும் சத்தமான இடங்களில் பேசுபவர்களின் வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படலாம்.
இதனால் சத்தமான இசை மட்டுமே ஆபத்தானது என்ற தவறான புரிதலும் உடைகிறது. ஜிம், பேருந்து, ரயில், விமானம் அல்லது பரபரப்பான சாலைகள் போன்ற இடங்களில் பின்னணி இரைச்சலை தடுக்க பலர் தங்களை அறியாமலேயே ஒலியளவை அதிகரிக்கிறார்கள்.
இந்த தொடர்ச்சியான ஒலி வெளிப்பாடு, மூளையை அதிக சத்தத்திற்கு பழக்கப்படுத்தி விடுகிறது. இதன் விளைவாக, முன்பு போதுமானதாக இருந்த ஒலியளவு காலப்போக்கில் குறைவாகத் தொடங்கி, மேலும் அதிக சத்தம் கேட்கும் பழக்கம் உருவாகிறது.
செவித்திறனுக்கு மட்டுமல்ல, நீண்ட நேர இயர்போன் பயன்பாடு மன ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து ஒலி தூண்டுதலில் இருக்கும் மூளை ஓய்வெடுக்க முடியாமல் எப்போதும் ஒரு வித விழிப்புணர்வு நிலையிலேயே இருந்து விடுகிறது.
இது அதிக மன அழுத்தம், எரிச்சல், கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் தூக்கக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். மன அமைதிக்கு அவசியமான அமைதியான நேரம் குறைந்து போவதும் இதன் ஒரு மறைமுக விளைவாகும்.
இந்த ஆபத்துகளை குறைக்க நிபுணர்கள் பரிந்துரைக்கும் எளிய நடைமுறை “60/60 விதி” ஆகும். அதாவது, ஒரே நேரத்தில் 60 நிமிடங்களுக்கு மேல் இயர்போன் பயன்படுத்தக் கூடாது மற்றும் ஒலியளவு சாதனத்தின் 60 சதவீதத்தை தாண்டக் கூடாது. இடைவெளிகளில் இயர்போன்களை கழற்றி காதுகளுக்கு ஓய்வு கொடுப்பதும், சத்தமான இடங்களில் ஒலியளவை உயர்த்துவதற்குப் பதிலாக இரைச்சலைத் தடுக்கும் இயர்பட்கள் அல்லது noise-cancelling ஹெட்போன்களை பயன்படுத்துவதும் பாதுகாப்பானது.
எனவே, இசை கேட்பதையோ,தொலைபேசி அழைப்புகளை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால் அவற்றை விழிப்புணர்வுடனும் கட்டுப்பாட்டுடனும் பயன்படுத்துவது அவசியம். குறைந்த ஒலி, குறுகிய நேரம், அடிக்கடி இடைவெளிகள் மற்றும் அமைதியான தருணங்களுக்கு இடமளிக்கும் பழக்கங்கள், உங்களது செவித்திறனையும் மன அமைதியையும் நீண்ட காலம் பாதுகாக்க உதவும்.
![]()