மலையில் 200-300 மீற்றர் உயரப் பகுதியில் விரிசல்கள்; தெமோதர மக்கள் பெரும் அச்சம்

சுற்றுலா தலமான தெமோதர புகையிரத சந்திப்பை பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்ட கண்காணிப்பு தளத்திற்கு அருகிலுள்ள மலையில் 200-300 மீற்றர் உயரமுள்ள ஒரு பகுதி விரிசல் அடைந்து வரும் நிலையில் மண் சரிவு ஏற்படும் அபாயத்திலுள்ளதாக பிரதேச வாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
பதுளை-கொழும்பு பிரதான வீதிக்கு மேலுள்ள இரண்டு கல்குவாரிகளுக்கு இடையில் அமைந்துள்ள மலை பிரதேசத்தில் நிலம் தாழிறங்கி சுமார் 3 அடி சரிந்து இரண்டு அடி அகலமும் சுமார் 4 அடி ஆழமும் கொண்ட பாரிய வெடிப்பு காணப்படுவதாகவும் இப் பகுதி மண்சரிவு ஏற்படுமிடத்தே பெரிய பிரதேசம் கடுமையாக சேதமடைந்து, பதுளை-கொழும்பு பிரதான வீதி தடைப்படக்கூடும், எனவும் தெமோதர மருத்துவமனையின் நுழைவாயிலும் தடைப் பட்டு வீதியின் கீழே உள்ள குடியிருப்புகளுக்கும் அதிக ஆபத்து ஏற்படலாம் என அஞ்சும் பிரதேச மக்கள் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இது தொடர்புடைய அதிகாரிகள் இப் பிரதேசத்தை கவனத்தில் கொண்டு செயற்படுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இம் மலையின் மேலுள்ள நீர்நிலை மறைந்து, கீழுள்ள நீர் ஓடையில் நீர் கலந்து பாய்ந்து, பெரிய பாறைகள் கொண்ட நிலப்பரப்பை உருவாக்கலாம் என அஞ்சும் மக்கள் தற்போது இடை இடையே இப் பிரதேசத்தில் மழை பெய்வதால் கடுமையான பேரழிவு ஏற்படக்கூடும் என அச்சமும் தெரிவிக்கின்றனர்.
![]()