முச்சந்தி

28 அம்ச ட்ரம்ப் அமைதித் திட்டம்… முடிவுக்கு வருமா உக்ரைன் போர்?….  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(நேட்டோ மேலும் விரிவடையாது என்றும், நேட்டோ உக்ரைனில் துருப்புக்களை நிறுத்தாது என்று ஒப்புக்கொள்வதுடன், ஐரோப்பிய போர் விமானங்கள் போலந்தில் மட்டுமே நிறுத்தப்படும் என்று அமெரிக்க உறுதியளித்துள்ளது )
உக்ரைன் நேட்டோவில் சேர முடியாது என்று ஒப்புக்கொள்வதுடன் கிரிமியா, லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் ஆகியவை ரஷ்ய பிரதேசங்களாக அங்கீகரிக்கப்படுகிறது. இந்த 28 அம்ச அமைதித் திட்டத்தால் யாருக்கு அதிக லாபம் – இழப்பு ஏற்படும் என்பதை இலகுவாக கணிக்க முடியும்.
உக்ரைன் போர் முடிவுறுமா ?
ரஷ்யா-உக்ரைன் அமைதித் திட்டம் தொடர்பான 28 அம்ச ஒப்பந்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் தகுதியைப் பெறுவதுடன், உக்ரைன் 100 நாட்களில் தேர்தலை நடத்தும் என ட்ரம்ப் இந்த அமைதித் திட்டம் மூலம் அறிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் மூலம் உக்ரைனில் ரஷ்ய மொழிக்கு அதிகாரப்பூர்வ மொழி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். மற்றும் ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் மத தேவாலய உள்ளூர் கிளையை அங்கீகரிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.
அமைதி திட்டத்திற்கு ட்ரம்ப் ஒப்புதல்:
ஆனாலும் ரஷ்யாவின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதே இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனை என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையிலான போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று இராஜதந்திர நிபுணர்கள் நம்புகின்றனர்.
அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகளால் கூட்டாக உருவாக்கப்பட்ட ஒப்பந்த முன்மொழிவுகள், ட்ரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மூலம் உக்ரைனுக்கு தெரிவிக்கப்பட்டன.
டான்பாஸ் பகுதியை ரஷ்யாவிற்கு முழுமையாக வழங்குவது உள்ளிட்ட விடயங்கள் இந்த ஒப்பந்தத்தில் உள்ளன. இந்த அமைதி திட்டத்தில் உக்ரைன் இராணுவத்தின் ஆயுதத் திறன்களைக் குறைப்பது மற்றும் அமெரிக்க இராணுவ ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டு வருவது ஆகியவை அடங்கும் என்ற தகவல்களும் உள்ளன.
அத்துடன் ரஷ்யாவின் மூலோபாய இலக்குகளை குறிவைக்க நீண்ட தூர ஏவுகணைகளுக்கான உக்ரைனின் நீண்டகால கோரிக்கையை நிராகரிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேட்டோ மேலும் விரிவடையாது:
ட்ரம்ப் அமைதித் திட்டம் மூலம் உக்ரைனின் இறையாண்மை உறுதிப்படுத்தப்படும். ரஷ்யா அண்டை நாடுகளை ஆக்கிரமிக்காது என்றும், நேட்டோ மேலும் விரிவடையாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பாதுகாப்புப் பிரச்சினைகளையும் தீர்க்கவும், பதற்றத்தைக் குறைப்பதற்கான நிலைமைகளை உருவாக்கவும், அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே ஒரு வலுவான உறவு ஏற்படுத்தப்படும்.
மேலும் உக்ரைன் நம்பகமான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெறும். உக்ரைனின் ஆயுதப் படைகளின் அளவு 600,000 ஆக அமையும். மேலும் உக்ரைன் நேட்டோவில் சேராது என்பதை அதன் அரசியலமைப்பில் சேர்க்க ஒப்புக்கொள்கிறது. மேலும் எதிர்காலத்தில் உக்ரைனை ஏற்றுக்கொள்ளாது என்ற ஒரு விதியை அதன் சட்டங்களில் சேர்க்க நேட்டோவும் ஒப்புக்கொள்கிறது.
இதனால் நேட்டோ உக்ரைனில் துருப்புக்களை நிறுத்தாது என்றும் ஒப்புக்கொள்கிறது. ஐரோப்பிய போர் விமானங்கள் போலந்தில் மட்டுமே நிறுத்தப்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் :
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தால், ஒரு தீர்க்கமான ஒருங்கிணைந்த இராணுவ பதிலுக்கு கூடுதலாக, அனைத்து உலகளாவிய தடைகளும் மீண்டும் நிலைநிறுத்தப்படும். உக்ரைன் இராணுவம் மாஸ்கோ அல்லது செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் காரணமின்றி ஏவுகணையை ஏவினால், இந்த பாதுகாப்பு உத்தரவாதம் செல்லாததாகக் கருதப்படும்.
மேலும் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் உரிமையைத் தக்க வைத்துக் கொள்வதுடன், ரஷ்யா உலகப் பொருளாதாரத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்படும். ரஷ்யா மீதான தடைகளை நீக்குவது படிப்படியாகவும் தனிப்பட்ட நாடுகளின் அடிப்படையிலும் விவாதிக்கப்பட்டு ஒப்புக் கொள்ளப்படும்.
G8 க்கு ரஷ்யா திரும்பும்:
மீண்டும் G8 க்கு திரும்ப ரஷ்யா அழைக்கப்படும். முடக்கப்பட்ட சொத்துக்கள் உக்ரைனில் அமெரிக்கா தலைமையிலான மறுசீரமைப்புக்கு பயன்படுத்தப்படும். அத்துடன் மேலதிக முதலீட்டு முயற்சிகளாக, முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்படும். இந்த முயற்சியிலிருந்து அமெரிக்கா 50% லாபத்தைப் பெறும். உக்ரைனின் மறுசீரமைப்புக்குக் கிடைக்கும் மொத்த முதலீட்டை அதிகரிக்க ஐரோப்பா மேலும் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யும்.
மீதமுள்ள முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்கள், தீர்மானிக்கப்படும் பகுதிகளில் கூட்டு அமெரிக்க-ரஷ்ய திட்டங்களை செயல்படுத்தும் ஒரு தனி அமெரிக்க-ரஷ்ய முதலீடாக செய்யப்படும். இந்த நிதி இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதையும், மீண்டும் மோதலுக்கு வராமல் இருக்க வலுவான உந்துதலை உருவாக்குவதற்காக பகிரப்பட்ட நலன்களை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும்.
அணு ஆயுதப் பரவல் தடை மற்றும் ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான ஒப்பந்தங்களின் செல்லுபடியை நீட்டிக்க அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒப்புக் கொள்ளும். இதில் START-1 என்ற திட்டமும் அடங்கும். அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின்படி உக்ரைன்
அணு ஆயுதப் பரவல் அல்லாத நாடாக இருக்க ஒப்புக்கொள்கிறது.
ஜபோரிஜியா அணு மின் நிலையம் ஐநாவின் IAEA மேற்பார்வையின் கீழ் மீண்டும் திறக்கப்படும். மேலும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் சமமாகப் பிரிக்கப்படும் (50:50) இரு நாடுகளும் பள்ளிகளிலும் சமூகத்திலும் வெவ்வேறு கலாச்சாரங்களின் புரிதல் மற்றும் சகிப்புத்தன்மையை ஊக்குவிக்கும் மற்றும் இனவெறி மற்றும் தப்பெண்ணத்தை நீக்கும் கல்வித் திட்டங்களை அறிமுகப்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மத சகிப்புத்தன்மை மற்றும் மொழியியல் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்த ஐரோப்பிய ஒன்றிய விதிகளை உக்ரைன் ஏற்றுக்கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். அனைத்து பாகுபாடான நடவடிக்கைகளையும் நீக்கவும், உக்ரேனிய மற்றும் ரஷ்ய ஊடகங்கள் மற்றும் கல்வியின் உரிமைகளை உத்தரவாதம் செய்யவும் இரு நாடுகளும் ஒப்புக்கொள்கின்றன.
உக்ரைனில் நாஜி சித்தாந்த தடை:
உக்ரைனில் அனைத்து நாஜி சித்தாந்தமும் செயல்பாடும் நிராகரிக்கப்பட்டு தடை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் இந்த தீர்மானம் உள்ளது.
கிரிமியா, லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் ஆகியவை
ரஷ்ய பிராந்தியங்களாக அங்கீகரிக்கப்படும். கெர்சன் மற்றும் சபோரிஷியா ஆகியவை எதிர்கால
நடைமுறையில் அங்கீகாரத்தை உறுதி செய்யும்.
ஆனாலும் ரஷ்யா தற்போது கட்டுப்படுத்தும் ஐந்து பிற இணைக்கப்பட்ட பிரதேசங்களான கார்கிவ், சுமி மற்றும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க்கை கைவிட வேண்டிய நிலையும் உள்ளது.
உக்ரேனியப் படைகள் தற்போது அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் பகுதியிலிருந்து முழுமையாக விலகும். எதிர்கால பிராந்திய ஏற்பாடுகள் ஒப்புக் கொள்ளப்பட்ட பிறகு, ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் உக்ரைன் இரண்டும் இந்த ஏற்பாடுகளை வலுக்கட்டாயமாக மாற்ற வேண்டாம் என்று உறுதியளிக்கின்றன. இந்த உறுதிப்பாட்டை மீறும் பட்சத்தில் எந்தவொரு பாதுகாப்பு உத்தரவாதங்களும் பொருந்தாது என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டினிப்ரோ நதியை உக்ரைன் வணிக ரீதியாகப் பயன்படுத்துவதை ரஷ்யா தடுக்காது, மேலும் கருங்கடல் முழுவதும் தானியங்களை இலவசமாக கொண்டு செல்வது குறித்து ஒப்பந்தங்கள் எட்டப்படும்.
மீதமுள்ள அனைத்து போர்க் கைதிகளும் குழந்தைகள் உட்பட அனைத்து பொதுமக்கள் கைதிகளும் பணயக் கைதிகளும் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
100 நாட்களில் உக்ரைன் தேர்தல்:
மேலும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தான 100 நாட்களுக்குப் பிறகு உக்ரைன் தேர்தலை நடத்த வேண்டும். மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் போரின் போது செய்யப்பட்ட நடவடிக்கைகளுக்கு முழு மன்னிப்பு பெறுவர். மேலும் எதிர்காலத்தில் உரிமைகோரல்களைப் பதிவு செய்யவோ அல்லது புகார்களைத் தொடரவோ கூடாது. இந்த ஒப்பந்தம் சட்டப்பூர்வமாக பிணைக்கப்படும்.
இதன் செயல்படுத்தல் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அமைதி கவுன்சிலால் கண்காணிக்கப்பட்டு உத்தரவாதம் அளிக்கப்படும். மீறல்கள் ஏற்பட்டால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட தடைகள் மீண்டும் பொருந்தும். இந்த ஒப்பந்தத்தில் அனைத்து தரப்பினரும் ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டவுடன், இரு தரப்பினரும் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலைப்பாடுகளுக்கு பின்வாங்கியவுடன் உடனடியாக போர்நிறுத்தம் அமலுக்கு வரும். இதன் மூலம் ஒப்பந்தத்தை செயல்படுத்தத் தொடங்கலாம்.
மேலும் மியாமியில் உக்ரைனின் தேசிய பாதுகாப்புத் தலைவர் ருஸ்தம் உமெரோவைச் சந்தித்த விட்காஃப், உக்ரைன் நீண்டகாலமாக நிராகரித்து வந்த விதிகள் உட்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று பரிந்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய தூதரும் புடினின் நம்பிக்கைக்குரியவருமான கிரில் டிமிட்ரியேவ் மற்றும் உக்ரைன் அதிகாரிகள் இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், ரஷ்யாவுடனான இராஜதந்திர உறவுகளில் முன்னேற்றத்தைக் காட்ட டிரம்ப் நிர்வாகம் உக்ரைன் மீது ஒப்பந்தத்தைத் திணிப்பதாக சில விமர்சனங்கள் உள்ளன.
ஒப்பந்தத்தின் விதிமுறைகள் சமநிலையற்றவை என்றும், உக்ரைனின் இறையாண்மையைக் கூட கேள்விக்குள்ளாக்குகின்றன என்றும் சில சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *