கவிதைகள்

மாறுபட்ட ஹைக்கூவில் வேறுபட்ட ஒரு ஐ க்யூ!!… கவிதை… சங்கர சுப்பிரமணியன்

உடல் இந்த மண்ணுக்கு என்றான்
உயிர் இன்பத் தமிமிழுக்கு என்றான்
உடனிருந்து தீங்கையே செய்கிறான்

என்அம்மாவை அப்பாவை மாற்றுகிறான்
தன் பெற்றோராய் தப்பாய் சொல்கிறான்
பேரில்லாதோரை என் பெற்றோரென்றான்

தமிழர் வீரம் தமிழர் பண்பென்றான்
தமிழர் நாகரிகம் என்றும் புகழ்ந்தவனே
இன்று அதையே திருத்தவும் பார்க்கிறான்

என் கடவுளுக்கு வேறு பெயர் வைத்தான்
விரும்பியே திரைமறைவில் மகிழ்ந்தான்
என்கடவுளையே தன் கடவுள் என்கிறான்

கோயில் கொடியவர் கூடாரமென்றான்
அப்படிச் சொல்லியே வாழ்ந்து வந்தான்
இன்று கோயில் கோயிலாக போகிறான்

தமிழின் தொன்மைபற்றி பேசியவன்
கீழடி நாகரிகம் வெளியே வந்தவுடன்
ஏனோ தேள் கொட்டிய திருடனானான்

ஆற்றில் நீர்பெற்று தருவேன் என்றான்
தீவுக்கும் தீர்வைப் பெறுவேனென்றான்
சொன்னதைச் சொல்லும் கிளியானான்

ஆற்றில் மணலைத் திருடுகின்றான்
மலையைவெட்டி மனம் மகிழ்கின்றான்
மது கொடுத்து குடியும் கெடுக்கிறான்

பொங்கு தமிழருக்கு இன்னல் நேர்ந்தால்
பொங்கியெழுந்து காக்க வருவானென்றான்
பொருட்படுத்தாது வேடிக்கை பார்க்கிறான்

பிள்ளை பிறந்த நாளைக் கொண்டாடினால்
பெயர் வைத்தநாளை கொண்டாடு என்கிறான்
பெற்றவளுக்கில்லா உரிமை மற்றவனுக்கேன்

வீட்டைப் பாதுகாப்பதாகச் சொன்னான்
வீடு தீப்பற்றியதும் அதை அணைக்காமல்
எரியும் வீட்டில் பிடுங்குவது லாபம் என்கிறான்

என்ன நடக்கிறது இங்கேயென குழம்பி
யார் யாரையே கேட்டு தெளிய முயன்றேன்
ஒன்றுமே புரியலையே இந்த உலகத்திலே

அவனைக் கேட்டால் இவனைச் சொல்கிறான்
இவனைக் கேட்டால் அவனைச் சொல்கிறான்
எவனென்று எவரேனும் சொல்லுங்களேன்!

சங்கர சுப்பிரமணியன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *