இலங்கை

பாதாளக் கும்பல்கள், கொலைகாரக் குழுக்களால் மாலையில் வீடு திரும்புவோமா என்ற சந்தேகத்திலேயே மக்கள்!

வெலிகம பிரதேச சபைத் தவிசாளரின் கொலையைத் தொடர்ந்து, கேகாலை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தன்னை தொலைபேசியில் அழைத்து, மக்களுக்கு சேவை செய்வதற்கான சூழல் சமூகத்தில் இல்லை என்று குறிப்பிட்டனர். இன்று, சமூகத்தில் பயங்கரம் கோலோச்சி, பாதாள உலகக் கும்பல்கள், கொலைகார கும்பல்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் தரப்பினர்கள் சமூகத்தைக் தமது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். இவற்றைத் தடுக்க முடியாத அரசாங்கமே இன்று ஆட்சியில் இருந்து வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மாவனெல்லை நகரில்   நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் எவ்வளவு தான் வீராப்பு பேசினாலும், இவ்வளவு தான் ஊடக காண்பிப்புகளைச் செய்தாலும், இன்று மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அவநம்பிக்கையுடனே வெளியேறுகின்றனர். மாலையானதும் வீட்டிற்கு வர முடியுமா என்ற சந்தேகத்தின் மத்தியிலயே வாழ்ந்து வருகின்றனர். இந்தக் கொலைகாரக் கும்பல்களும், பாதாள உலகக் கும்பல்களும் செய்யும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து, அடுத்தடுத்து சாதனைகளை பதிவு செய்து வருகின்றன .

திசைகாட்டி அரசாங்கம் வெலிகம பிரதேச சபைத் தவிசாளரை கொலை செய்வதற்கு முன்னர், அவரை அரசியல் ரீதியாகக் கொன்றது. முதலாவது சபை அமர்வுக் கூட்டத்தை நடத்த இடமளிக்காமை, மக்கள் விடுதலை முன்னணி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கடத்தப்பட்டதாக பொய்யாகக் குற்றம் சாட்டி போலியாக நடித்தமை, மக்கள் விடுதலை முன்னணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரினது வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், குறித்த உறுப்பினர் தொலைபேசியில் தெரிவித்த பிரகாரம், துப்பாக்கிச் சூடு மக்கள் விடுதலை முன்னணியினராலயே நடத்தப்பட்டது என்பது தெரியவந்தது.

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு மத்தியில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டு, வெலிகம தவிசாளர் பொலிஸ் மா அதிபரிடம் எழுத்துப்பூர்வ கோரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பு வழங்குமாறு அவர் கோரிய போதும், பொலிஸார் பாதுகாப்பை பெற்றுக் கொடுக்கவில்லை.

வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியமையே இந்த சம்பவங்கள் அனைத்திற்கும் பின்னால் உள்ள ஒரே காரணமாக அமைந்து காணப்படுகின்றது. இதேதான் மதுகம பிரதேசத்திலும் நடக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கும் கூட தற்போது கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. பாராளுமன்ற உறுப்பினரான அவருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களை அவராகவே வெளிக்கொணர்ந்தார். பொலிஸார் அல்ல. இத்தகைய பிரச்சினைகளுக்கு மத்தியில், பொலிஸ் மா அதிபர் ஊடகங்களுக்கு முன் வந்து ஜகத் விதான ஓர் குற்றவாளி என முத்திரை குத்தியுள்ளார். வெலிகம மற்றும் மத்துகம சம்பவங்களில் உள்ள பொதுவான அம்சம் என்னவென்றால், இந்த இரு சபைகளிலும் ஜே.வி.பி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்தமையாகும் என்றும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button