பலதும் பத்தும்

மெட்டா நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு! நாள் ஒன்றுக்கு 3.5 பில்லியன் பயனர்கள்

2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான (Q3) தனது நிதிசார் அறிக்கைகளை மெட்டா (Meta) நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகளவில் 3.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மெட்டா செயலியைப் பயன்படுத்துவதாக, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

தற்போது மாதாந்திரம் 3 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைத் தாண்டி இன்ஸ்டாகிராம் செயலி சாதனை படைத்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட த்ரெட்ஸ் (Threads) செயலி நாளாந்தம் 150 மில்லியன் பயனர்களைத் தாண்டியுள்ளது.

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 51.24 பில்லியன் டாலரை வருமானமாக ஈட்டியது. இது கடந்த ஆண்டைவிட 26% அதிகரிப்பாகும்.

மெட்டாவின் வருமானம் அதிகரித்திருந்தாலும், நிறுவனத்தின் செலவுகளும் ஆண்டுக்கு 32% அதிகரித்து 30.71 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்திய சர்ச்சைக்குரிய ‘ஒன் பிக் பியூட்டிஃபுல் பில் ஆக்ட்’-க்காக 16 பில்லியன் டாலரை மெட்டா நிறுவனம் கட்டணமாகச் செலுத்தியிருந்தது. இதன் காரணமாக நிறுவனத்தின் வருமானம் குறைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மைய மாதங்களில், மெட்டா ‘சூப்பர் இன்டெலிஜென்ஸ்’ AI அமைப்புகளை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்து வருகிறது.

OpenAI, Google DeepMind மற்றும் Anthropic போன்ற பிற முன்னணி AI நிறுவனங்களிலிருந்து திறமையாளர்களை ஈர்க்க, 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையைச் சம்பளமாக வழங்குகிறது.

அண்மையில் வெள்ளை மாளிகையில் நடந்த இராப்போசன நிகழ்வில், 2028 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்க தரவு மையங்கள் மற்றும் உள்கட்டமைப்பிற்காக 600 பில்லியன் டாலரை மெட்டா செலவிடும் என, அதன் நிர்வாக அதிகாரி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button