“அன்புள்ள கவிப்பேரசு வைரமுத்துவுக்கு” …. கவிதை… கவிப்புயல் சரண். (Video)

புலம் பெயர்ந்து இருக்கிறேன்
யாழ்ப்பாணம் வந்த
உங்களோடும் தமிழோடும்
உரையாட விழைகிறேன்
நாங்கள் விளையாடிய
வீதிகளை நாளும்
வீடியோவில் பார்க்கிறோம்.
ஆனால் நாங்கள் ஆடிய போர்க் களங்கள் என்னாயிற்று?
சாவகச்சேரி சௌக்கியம் தான்
நாங்கள் சாவுக்கு கச்சேரி
அடித்த இடம் சௌக்கியமா?
பருத்தித்துறை சௌக்கியம் தான்
நாம் பங்கர் வெட்டி வளர்ந்த பனை மரங்கள் சௌக்கியமா?
முகமாலை நலம் தான்
புலி வீரம் முகிழ்த்து நின்ற முன்னரங்கு நலமா?
புத்தூர் சௌக்கியம் தான்
எம் புலி பாய்ந்த பூவரசம்
வேலிகள் சௌக்கியமா?
விதைகளும் தியாகங்களும்
என்றைக்கும் வீணாவதில்லை;
ஒருநாள் முளைத்தே தீரும்”
என்று பேசினீர்களாமே
கண்ணீர் ததும்பக்
கரவொலி செய்தார்களாய் கேள்வி?
முளைகளை கருக்கும் போதும் விதைகளை புதைக்கும் போதும்
கொல்லாதே …
கருக்காதே..
புதைக்காதே..
என்றிருந்தால் கரவொலி என்ன
கட்டியே அணைத்து இருப்போம்…
கந்தகம் உடல் ஏற்றும் நேரம்
கைகளை கட்டி விட்டு
இப்போ கவணுக்கு கல் சேருங்கள் என்றால் எங்கே மீண்டும் தாவீது காலத்திற்கா????
✍கவிப்புயல் சரண்.
—— —— —- ——- —–

![]()