கவிதைகள்

மகளைத் திருத்த முயன்ற தாயும், மகள் சொன்ன பதிலும்!… கவிதை… சங்கர சுப்பிரமணியன்

குடும்பப் பெண்ணாக அடக்கமாய் இராது
எப்போதும் தலைமுடியை விரித்து போட்டபடி
இருக்கிறாயே என்ன இது?
நம் பண்பாடா இது என்று கேட்டாள் தாய்

நீங்கள்தான் பண்பாட்டை மறந்து விட்டீர்கள்
லட்சுமிகரமாக இருக்க வேண்டும் என்பீர்களே
தினம் அந்த லட்சுமியை வணங்கும் நீங்கள்
பூஜை அறையில் அவளை நன்றாக பாருங்கள்
அப்புறம் கேள்வியை கேளுங்கள் என்றாள்

லட்சுமி தலைமுடியை விரித்துப் போட்டபடி
எப்போதும் இருப்பது தெரியவில்லையா
அவளென்ன பண்பாடு இல்லாதவளா என்றாள்

அவள் செய்ததைத்தானே நான் செய்கிறேன்
நான் செய்தால் மட்டும் பண்பாடற்றவளா?
பதில் சொன்னாள் மகள் தாயிடம்

எந்த வேலையும் செய்யாமல் வீணாய் குத்துக்கல்லாய் ஓரிடத்தில் நிற்கிறாயேயென
மீண்டும் கண்டித்துக் கேட்ட தாயிடம்

நானாவது தரையில்தான் நிற்கிறேன்
லட்சுமியோ மென்மையான பூவின்மீது
ஓரிடத்தில் அசையாது நிற்கிறாளே
அவளென்ன குத்துக்கல்லா அம்மா
திருப்பிக் கேட்டாள் மகளும் தாயிடம்

பெண்ணாய் லட்சணமாய் சுறுசுறுப்பாயிராது
காதில் காதொலிப்பானை மாட்டிக் கொண்டு
ஒரே இடத்தில் அசையாமல் இருக்கிறாயே
மறுபடியும் அலுத்துக் கொண்டாள் தாய்

கையில் வீணையை வைத்தபடி பாறைமீது
ஒரே இடத்தில் இருக்கிறாளே சரஸ்வதி
அதைத்தானே இங்கு நானும் செய்கிறேன்
நான் செய்தால் தவறா அம்மா என்றாள் மகள்

ஐயோ இந்தகாலத்து பெண்பிள்ளைகள்
என்ன சொன்னாலும் பதில் சொல்வார்கள்
எப்படிப் பேசினாலும் அடங்க மாட்டார்கள்
மெதுவாகச் சொல்லித் தள்ளிச் சென்றாள்
கலிகாலமென முணுமுணுத்தது அவள் வாய்!

சங்கர சுப்பிரமணியன்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *