இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் பணிப்பாளர் 7 வருடம் சிறை செல்ல நேரிடும்

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் ரங்க திஸாநாயக்க, கடந்த காலத்தில் மக்கள் விடுதலை முன்னணயின் சட்டக் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றியதாக அக்கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான நந்தன குணதிலக தெரிவித்துள்ளார்.
அந்தக் காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நந்தன குணதிலக இருந்ததாகவும், அந்தக் கூட்டங்களுக்கான வருகை ஆவணங்களில் ரங்க திஸாநாயக்க கலந்து கொண்டு கையொப்பமிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த உண்மை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு பணிப்பாளரின் கடமைகள் தொடர்பாக கடுமையான சட்ட சிக்கலை எழுப்புகிறது.
2023ஆம் ஆண்டு ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 19இன் படி, ஆணைக்குழு பணிப்பாளர் அரசியல் சாராதவராக இருக்க வேண்டும்.
அரசியல்வாதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் சுமத்தப்படுவதால், பணிப்பாளரை சுயாதீனமாக்குவதற்காகவே இந்த சட்டம் உள்ளது.
இலஞ்ச விசாரணை ஆணைக்குழு பணிப்பாளர், தனது நியமனத்தின் போது இந்தத் தகுதியிழப்புகள் இல்லை என்று ஒரு பிரமாணப் பத்திரத்தை வழங்க வேண்டும்.
நந்தன குணதிலகவின் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், பணிப்பாளர், ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றத்தைச் செய்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
![]()