இலங்கை

சத்துருக்கொண்டான் பகுதியும் அகழ்ந்தெடுக்கப்பட வேண்டும்; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் பிரதேசம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்துருக்கொண்டான் படுகொலை இடம்பெற்று 35 வருடங்கள் கடந்த நிலையில் இது தொடர்பிலான நீதியான விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில் யாழ் செம்மணி போன்று வடக்கு கிழக்குப் பகுதிகளில் பல்வேறு படுகொலைகள் இடம்பெற்றுள்ளமையும் அது தொடர்பான எச்சங்கள் மீட்கப்படுகின்ற விடயங்களையும் கருத்திற் கொண்டு குறித்த முறைப்பாடு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு செட்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 85 பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட 42 சிறுவர்கள், 25 வயோதிபர்கள் உட்பட 186 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இராணுவத்தினராலும், ஊர்காவற்படையினராலும், ஒட்டுக்குழுவினராலும் இந்தப் படுகொலை அரங்கேற்றப்பட்டிருந்தது. இந்தப் படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றாகும்.

நினைவேந்தலை முன்னிட்டு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் தலைவர் வைரமுத்து குழந்தைவடிவேல் தெரிவிக்கையில்,

இன்று பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான், பனிச்சையடி மற்றும் கொக்குவில் ஆகிய கிராமங்களில் இலங்கை ராணுவத்தினராலும் முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் படுகொலை செய்யப்பட்டு 35 வது ஆண்டு நிறைவு.

இந்த படுகொலைக்கான நீதியை மீண்டும் எதிர்பார்த்துக் கொண்டு இன்று சத்துருக்கொண்டான் ராணுவ முகாம் அமைந்த இடத்தை அகழ்வு பணி மேற்கொள்ள வேண்டும் என்று மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாட்டை செய்துள்ளோம்.

அரசாங்கத்தின் உள்ளக விசாரணையில் எதுவித நம்பிக்கையும் இல்லை. எனவே இந்த விசாரணை ஒரு சர்வதேச பொறிமுறைக்கு சென்று விசாரணை செய்யப்பட வேண்டும் என்பதனை எதிர்பார்க்கின்றோம். இருப்பினும் இன்று இந்த நீதிக்காக நாங்கள் முறைப்பாட்டை செய்திருக்கின்றோம். இதற்கான நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். – என்று தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button