யாழ். செல்வச்சந்நிதி ஆலயத்தில் 111 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் முதல்முறையாக ஒரே நேரத்தில் 111 ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற்றது. இந்தப் பெரும் நிகழ்வு, யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு தம்பதியினரால் முன்னெடுக்கப்பட்டது.
தங்கள் மகளின் திருமணத்திற்குப் பிறகு, வசதி குறைந்த ஜோடிகளுக்கு உதவ வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் இந்தத் திருமணங்களைச் செய்து வைத்தனர்.
திருமணம் செய்ய வசதியற்ற அல்லது பதிவுத் திருமணம் மட்டும் செய்து தாலி கட்டாத யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 111 ஜோடிகள் இந்த நிகழ்விற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். யாழ் மாவட்டத்தின் 15 பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட மணமக்கள் இதில் அடங்குவர்.
இந்த ஜோடிகளைத் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் ச.சுதர்சன் மற்றும் யாழ்ப்பாணம் வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரன் ஆகியோர் மேற்கொண்டனர்.
இந்தச் சிங்கப்பூர் தம்பதியினர், மணமக்களுக்கு அரைப்பவுண் தாலி, கூறைச் சேலை மற்றும் இதர திருமணச் செலவுகள் என அனைத்தையும் ஏற்றுக்கொண்டனர். விசேட பூஜை ஆராதனைகள் மற்றும் குருமார்களின் ஆசியுடன் சுபமுகூர்த்த வேளையில் அனைத்து ஜோடிகளும் திருமணம் செய்துகொண்டனர்.

![]()