கவிதைகள்

நல்லூரான் தேர் நமக்கென்றும் பாக்கியமே !…. கதை… ஜெயராமசர்மா

வேலவனின் தேர் வீதியெலாம் பக்தர்
காதலுடன் கந்தனைக் கைகூப்பி நிற்கின்றார்
தீராத வினையகற்ற தேரேறி வருகின்றான்
வாருங்கள் தேரிழுத்து வணங்கியே நிற்போம்

அந்தணர் மந்திரம் அரிய திருமுறை
ஆனந்த இசை கேட்டபடி கந்தன்
தேரேறி வருகின்றான் திருமுகத்தைக் காண
ஓடோடி வாருங்கள் உளமுருக வேண்டுங்கள்

வீதியிலே பக்தர் வெண்மணலில் இடமில்லை
சோதியென கந்தன் சுடர்விட்டு தெரிகின்றான்
மாதவத்தின் காரணத்தால் வந்தமர்ந்தான் நல்லூரில்
நல்லூரான் தேரேறி வருகின்றான் காணுங்கள்

ஈழத்தை விட்டு இடம்பெயர்ந்து போனாலும்
எல்லோர் நினைப்பும் நல்லூராய் இருக்கிறது
காதலுடன் யாவரும் ஓடோடி வருகின்றார்
கந்தனது தேர்பார்த்து கவலைகளைக் களைந்திடவே

image0.jpeg

 

 

 

 

 

 

 

சமத்துவத்தின் இருப்பிடமாய் நல்லூர் இருக்கிறது
அடியார்கள் அனைவருமே அரன்மைந்தன் அன்பர்களே
முன்னுருமை கிடையாது முக்கியமும் கிடையாது
முருகனது அடியவராய் யாவருமே தெரிகின்றார்

கலாசாரம் பண்பாடு கந்தனது சன்னதியில்
காணுகின்ற பொழுதில் கண்ணியமே எழுகிறது
கந்தனது தேர்பார்க்க வந்துவிடும் அடியார்கள்
செந்தமிழால் கந்தனை சேவித்துப் போற்றுகிறார்

அலங்காரக் கோலத்துடன் ஆறுமுகன் வருகின்றான்
தேரமர்ந்த ஆறுமுகன் தெரிசனமும் தருகின்றான்
ஊர்கூடித் தேரிழுத்து உவகையுடன் நிற்கின்றார்
உளமுருகி யாவருமே தமைமறந்து நிற்கின்றார்

செல்லப்பா யோகர் சிறப்புடைச் சித்தர்
நல்லூரான் மண்ணில் நடந்து திரிந்தார்கள்
வல்வினை போக்கிட வந்தமர்ந்த கந்தன்
நல்லூரில் நின்று நாளுமருள் புரிகின்றான்

அல்லல் களைவான் அரவணைத்து நிற்பான்
ஆறுதல் தேறுதல் அனைவர்க்கு மளிப்பான்
சொல்லாமல் அறிவான் துயரினைத் துடைப்பான்
நல்லை நகருறையும் நம்கந்தப் பெருமான்

நல்லூரான் தேர் நமக்கென்றும் பாக்கியமே
எங்கிருந்த போதும் எப்படியும் போய்விடுவோம்
தேர்பார்த்து நாமும் தெளிவினைப் பெற்றிடுவோம்
ஆதலால் தேர்பார்ப்போம் அனைவரும் வாருங்கள்

image1.jpeg

 

 

 

 

 

 

 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *