பலதும் பத்தும்

தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி!

தமிழகத்தில் நோய் வாய்ப்பட்ட நிலையில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை கருணைக் கொலை செய்யலாம் என்றும், அந்த நாய்களின் உடல்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால், தினந்தோறும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வீதியில் நடந்து செல்லும் பொது மக்களை தெருநாய்கள் துரத்தி துரத்தி கடித்து வருகின்றன.

இதனால் பலர் நாய் கடிக்கு ஆளாகி அவதி அடைந்து வருகின்றனர். இதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீதியில் நடை பயிற்சி மேற்கொண்டு இருந்த பெண் ஐஏஎஸ் அதிகாரியை நாய் ஒன்று கடித்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்தது.

இதே போல, சிறுவர் சிறுமிகளையும் நாய் கடித்ததில் பலத்த காயமடைந்துள்ளனர்.

இதில், சில தெரு நாய்களிடம் ரேபிஸ் உள்ளிட்ட நோய் தொற்றுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், அந்த நாய்கள் பொதுமக்களை கடிக்கும் போது அவர்களுக்கும் அந்த நோய் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது.

அண்மையில் கூட ஒரு இளைஞர் நாய் கடித்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில், அந்த நாயிடம் இருந்து பரவிய ரேபிஸ் நோய் தொற்று அவரது உடல் முழுவதும் பரவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், தமிழக அரசு ஒரு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் அதிகரித்து வரும் நாய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

எனவே, இதில், நோய் வாய்ப்பட்ட தெரு நாய்களை கருணைக் கொலை செய்யலாம். இந்தப் பணியை பதிவு செய்யப்பட்ட வைத்தியர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும்.

தெரு நாய்களால் பொது மக்களுக்கு ரேபிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கால்நடைத்துறை சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கருணைக் கொலை செய்யப்படும் தெரு நாய்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் நோய் வாய்ப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்து வரும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்யும் பட்சத்தில் தெரு நாய்களின் தொல்லை ஒரளவு குறையும் என்று தெரிகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button