வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்களை மூட கோரிக்கை

வவுனியா மாநகர சபைக்குட்பட்ட வர்த்தக நிலையங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் பூட்டி ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகரசபையினர் விடுத்த கோரிக்கைக்கமைவாக வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை பூட்டி தமது ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர்.
வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களுக்கு வாரத்தில் ஒர் நாளாவது விடுமுறை வழங்கி அவர்கள் குடும்பத்தினருடன் சந்தோசமாக அந்த நாளை கழிப்பதற்கும் அவர்களின் அயராத உழைப்புக்கு ஒர் நாள் ஒய்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைவாக வவுனியா மாநகர சபையின் கடந்த அமர்வின் போது ஞாயிற்றுக்கிழமைகளில் மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய தேவை தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களை மூடுவது தொடர்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டன.
அந்தவகையில் வவுனியா மாநகரசபையினரினால் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய தேவை தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களை மூடி மாநகர சபைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு ஒலிவாங்கி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியா மாநகரசபைக்குட்பட்ட அத்தியாவசிய தேவை தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களாக ஆடையகம் , பலசரக்கு பொருட்கள் விற்பனை நிலையம் , காட்வேயார் , இலத்திரனியல் விற்பனை நிறுவனங்கள் , அழகு சாதன நிலையம் போன்ற பலரும் தமது வர்த்தக நிலையங்களை மூடி தமது ஆதரவினை வழங்கியமையினை அவதானிக்க முடிந்தது.
வவுனியா பஜார் வீதி , தர்மலிங்கம் வீதி , கொரவப்பொத்தானை வீதி , முதலாம் மற்றும் இரண்டாம்குறுக்குத்தெரு வீதி , பழைய பேரூந்து நிலையம் , மில் வீதி , புகையிரத நிலைய வீதி , குருமன்காடு , மன்னார் வீதி போன்ற மாநகரசபைக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை மூடியிருந்தனர்.
மாநகரசபையின் இச் செயற்பாட்டிற்கு ஊழியர்கள் , வர்த்தகர்கள் , பொதுமக்கள் உட்பட பலரும் தமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
![]()