பலதும் பத்தும்

உலகம் முழுவதும் 2024 இல் 1.4 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படவில்லை

உலகம் முழுவதும் கடந்த 2024-ஆம் ஆண்டு 1.4 கோடி குழந்தைகளுக்கும் அதிகமானோருக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை என்று ஐ.நா.சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2020 இல் கொரோனா பெருந் தொற்று பாதிப்பின்போது அமுல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின்போது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவது தடைப்பட்டது. அதன் பின்னர் குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தப்படுவது முந்தைய நிலைக்கு இன்னும் திரும்பவில்லை.

சா்வதேச அளவில் தடுப்பூசி அளிக்கப்பட்டது தொடா்பான ஆய்வு அறிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதுகுறித்து உலக சுகாதார அமைப்பு, யூனிசெப் அமைப்பு அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘கடந்த ஆண்டு ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளில் 89 சதவீதத்தினர் டிப்தீரியா, டெட்டானஸ், கக்குவான் இருமல் ஆகியவற்றின் முதல் தவணை தடுப்பூசியைப் பெற்றனர். 85 சதவீதத்தினர் மூன்று தவணை தடுப்பூசிகளைப் பெற்றனர். இதே அளவிலேயே 2023 இல் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.

இந்த வகை தடுப்பூசிகள் ஆண்டுதோறும் 35 இலட்சம் முதல் 50 லட்சம் மரணங்களைத் தடுக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தட்டம்மை தடுப்பூசிகள் உலகம் முழுவதும் 76 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால், இதை 95 சதவீதத்தை எட்டினால்தான் அதிகபடியான பரவல் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க முடிவும். கடந்த ஆண்டு 60 நாடுகளில் தட்டம்மை பாதிப்பு அதிகரித்திருந்தது.

அமெரிக்காவில் தட்டம்மை பாதிப்பு கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. ஐரோப்பாவில் கடந்த ஆண்டு சுமார் 1,25,000 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டனர்.

உலகில் தடுப்பூசி செலுத்தப்படாத மொத்த குழந்தைகளில் 52 சதவீதத்தினர் இந்தியா, நைஜீரியா, சூடான், காங்கோ, எத்தியோபியா, இந்தோனேசியா, ஜேர்மன், ஆப்கானிஸ்தான், அங்கோலா ஆகிய 9 நாடுகளில் உள்ளனர்.

உலக சுகாதார அமைப்புக்கு அளிக்கப்பட்டு வந்த மனிதாபிமான நிவாரண நிதி நிறுத்தப்பட்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளதால், நிகழாண்டு குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் சதவீதம் மேலும் மோசமாக இருக்கும் என்று ஐ.நா. அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button