வவுனியா, சூடுவெந்தபுலவு, மினாநகர் மக்கள் தமது பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா, சூடுவெந்தபுலவு, மினாநகர் மக்கள் தமது பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மினாநகர் பிரதான வீதியானது நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் சந்திக்கும் சந்தியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. இதன்போது போராட்டத்தில் ஈடுபடடவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
சூடுவெந்தபுலவு, மினாநகர் கிராமமானது 2013 ஆம் ஆண்டு குடியேற்றம் செய்யப்பட்ட கிராமம் ஆகும். இக் கிராமத்தின் பிரதான வீதியானது 12 வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாமல் உள்ளது. தினசரி கல்குவாரி டிப்பர் வாகனம் செல்வதால் கிராமத்தின் பிரதான வீதியானது சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.
ஆகவே, எங்களுக்கு இந்த வீதி தொடர்பான தெளிவினை ஏற்படுத்தி வீதியினை சிறப்பான முறையில் அமைத்துத் தந்து கல்குவாரி செல்லும் கனரக வாகனங்களுக்கு வேறு பாதை அமைத்து தருமாறும் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்தனர்.
கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்து முகமது, செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர் இம்தியாஸ் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆகியோர் மக்களது கோரிக்கைகளை கேட்டறிந்ததுடன், செட்டிகுளம் பிரதேச சபை ஊடாக குறித்த வீதியை புனரமைத்து தருவதாகவும், கல்குவாரி தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தை வைவிட்டு சென்றிருந்தனர்.









![]()