இலங்கை

“தமிழர் தேசமாக அனைவரும் திரளுங்கள்” – செம்மணி போராட்டத்திற்கு யாழ்.பல்கலை அழைப்பு!

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் நடைபெறவுள்ள “அணையா விளக்கு” போராட்டத்திற்கு தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டும் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

போராட்டம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லகிதர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச நீதி கோரியும், சர்வதேசக் கண்காணிப்புடன் மனிதப் புதைகுழி அகழ்வை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் ‘மக்கள் செயல்’ என்கின்ற தன்னார்வ இளையோர் அமைப்பால் எதிர்வரும் 23ஆம் திகதி

தொடக்கம் 25ஆம் திகதி வரையில் செம்மணி வளைவுப் பகுதியில் ‘அணையா விளக்கு’ போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சிவில் சமூக அமைப்புகள் இணைந்து அணையா விளக்கு என்ற போராட்டத்தை மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி வேண்டி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது. நாங்கள் ஒரு பங்காளராக பங்கேற்று முற்றுமுழுதாக வடக்கு கிழக்கில் மிகப்பெரிய அழைப்பை முன்னெடுக்கின்றோம். எமது உறவுகளுக்காக உயிரிழந்த உறவுகளுக்காகவும் இழைக்கப்பட்ட அநீதிக்காகவும் தமிழ் தேசமாக திரண்டு போராட்டத்தில் ஒன்றுசேர வேண்டும்.

இலங்கைக்கு தற்போது வருகைதரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்ய உள்ளதாக அறிய முடிகிறது. மிக முக்கியமாக செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தை மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதியை மனிதப் புதைகுழியாக அறிவிக்க வேண்டும். தொடர்ச்சியாக சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டு சர்வதேசத்தின் முற்று முழுதாக தலையிட்டு அகழ்வாய்வை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் ஈழத் தமிழர்களுடைய பிரச்சினையை திசை திருப்பவே மனித உரிமைகள் ஆணையாளரை இலங்கை அரசாங்கம் அழைத்துள்ளது. வடக்கு கிழக்கு தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி எங்கள் பிரச்சினைகளையும் மனித புதைகுழிகள் தொடர்ச்சியாக தோண்டப்படும் விடயங்களையும் வெளிப்படுத்த வேண்டும் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button