திருமணமான மறுநாளே போர் முனைக்கு கிளம்பிய ராணுவ வீரர்

பிஹாரின் பக்ஸர் மாவட்டம் நந்தன் கிராமத்தைச் சேர்ந்த சிப்பாயான தியாகி யாதவ் காஷ்மீரின் ஸ்ரீநகரில் பணியாற்றி வருகிறார். அவர் தனது திருமணத்திற்காக விடுப்பு எடுத்துக் கொண்டு பக்ஸர் வந்திருந்தார். இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை (09) திருமணம் முடிந்தது.
இதனிடையே, பஹல்காம் தாக்குதலுக்கு பின் எல்லையில் பாகிஸ்தானுடன் போர் தொடங்கி விட்டது. இதனால், இந்திய ராணுவம் தனது வீரர்களின் விடுப்பை ரத்து செய்து, உடனடியாக பணிக்கு திரும்புமாறு அறிவுறுத்தியது. இதை ஏற்று திருமணமான மறுநாளிலேயே பணிக்கு கிளம்பி விட்டார் தியாகி யாதவ்.
அவரது பெற்றோரும் தாய்நாட்டிற்கு சேவை செய்வது முக்கியம் எனக் கூறி அனுப்பி வைத்துள்ளனர். புது மனைவியான பிரியா யாதவும் தன் கணவர் தியாகி யாதவை பெருமிதத்துடன் வழியனுப்பி வைத்துள்ளார். இந்த நெகிழ்வான சம்பவம் வட மாநிலங்களின் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதில் பிரியா யாதவ் கூறும்போது, ‘எனது கணவர், தாய்நாட்டின் மேல் பாசமும் பற்றும் நிறைந்தவர். உறுதியான எண்ணம் கொண்டவர், திருமணமான மறுநாளே பாகிஸ்தானை தோல்வியுறச் செய்யப் போர்முனைக்குச் சென்றுவிட்டார். நான் எதைப்பற்றியும் சிந்திக்காமல் அவர் தன் கடமையை செய்வதற்காகப் பெருமையுடன் வழியனுப்பி வைத்தேன்’ என்றார்.
தியாகி யாதவின் திருமணத்துக்கு கூடியவர்களை விட அதிகப்படியானோர் இணைந்து அவரை வழியனுப்பி வைத்துள்ளனர். அவருடைய குடும்பத்தில் பலரும் ராணுவத்தில் பணியாற்றியவர்கள்.
அவரது உறவினர் ஓம் பிரகாஷ் யாதவ் ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பணி புரிகிறார். தாயார் மங்கள் யாதவும் ராணுவத்தில் உள்ளார். பிஹாரின் இந்த யாதவ் குடும்பம் மூன்று தலைமுறைகளாக நாட்டிற்கு சேவை செய்து வருவது பெருமைக்குரியதாக அமைந்துள்ளது.
![]()