முச்சந்தி

மே 6 சிரமதானத்தையும் சிறப்பாக செய்வோம்!

“மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளையும் கைப்பற்றுவதற்கு நாம் தயார் நிலையில் இருக்கின்றோம். அதற்குரிய பேராதரவை மக்கள் எமக்கு வழங்கிவருகின்றனர்” என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.

தலவாக்கலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின்போது நாட்டை சுத்தப்படுத்தும் சிரமதானத்தை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம். 

நுவரெலியா மாவட்டத்தின் தலைவிதியையும் மாற்றினோம். இன்னும் ஓர் சிரமதானம் எஞ்சியுள்ளது. அதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்போம். 

பிறப்பு முதல் இறப்புவரை எமது வாழ்க்கையுடன் உள்ளுராட்சிசபைகள் தொடர்புபட்டுள்ளன. எனவே, ஊழல், மோசடிகளுடன் தொடர்புடையவர்களுக்கு ஆணை வழங்கிவிடக்கூடாது. 

கொள்கையை முன்வைத்து பிரச்சாரம் செய்வதைவிடுத்து, நுவரெலியா மாவட்டத்தில் இனவாதத்தை தூண்டும் வகையில் சில அரசியல்வாதிகள் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர். 

எமது ஆட்சியில் இனவாதத்துக்கு இடமில்லை. அவ்வாறு பாகுபாடு காட்டப்படவும் மாட்டாது. 

எனவே, இனவாதத்தை பரப்பும் அரசியல்வாதிகளின் கருத்துகளை மக்கள் நம்பக்கூடாது. அதேபோல தமது கொள்கைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்யுமாறு அரசியல்வாதிகளிடமும் கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button