22 கோடி ரூபா மோசடி; 400 பெண்களை ஆபாச வலையில் சிக்க வைத்தது எப்படி?

மாடலிங் கற்றுத் தருவதாக கூறி அழகிகளிடம் 22 கோடி ரூபா மோசடி செய்த நிலையில், இந்த வலையில் 5 வருடங்களில் சுமார் 400இற்கும் மேற்பட்ட பெண்கள் சிக்கியதாகவும், அவர்களின் ஆபாச வீடியோ வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் பொலிவுட் நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் சட்டவிரோதமாக இணையவழி ஆபாச வீடியோ வெளியிடப்படுவதாக அமுலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து நொய்டாவில் உள்ள உஜ்வால் கிஷோர் என்பவரது வீட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் உஜ்வாலும், அவரது மனைவி நீலுவும் சேர்ந்து சைப்ரஸ் நாட்டை சேர்ந்த டெக்னிஸ் என்ற நிறுவனத்துடன் சேர்ந்து ஆபாச வீடியோ இணைய தளங்களை நடத்தி வந்தது தெரியவந்தது. இதற்காக சட்டவிரோதமாக 15.66 கோடி வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆபாச வீடியோ மற்றும் இணையவழி வீடியோ மூலம் கிடைக்கும் நிதியை சட்டவிரோதமாக இத்தம்பதி வெளிநாட்டிற்கு அனுப்பி வந்துள்ளனர். அவர்கள் விளம்பரம் மற்றும் மார்க்கெட் ஆராய்ச்சிக்கான கட்டணம் என்று தவறான தகவல் கொடுத்து இதுபோன்று பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்பி வந்தனர்.
பின்னர், தம்பதி உள்ளிட்ட சிலரை அமுலாக்கத்துறை கைது செய்து வருகிறது. இது தொடர்பில் அமுலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘உஜ்வால் இதற்கு முன்பு ரஷ்யாவில் இதே தொழிலை செய்து வந்தார். அதன்பிறகு இந்தியாவிற்கு வந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது மனைவியுடன் சேர்ந்து இத்தொழிலை செய்து வந்துள்ளார். இவர்கள் தங்களுக்கு தேவையான மாடல் அழகிகளை பேஸ்புக் மூலம் தேர்வு செய்து, இதற்காக பிரத்யேகமாக ‘echato.com’ என்ற இணைய பக்கத்தை உருவாக்கி அதன் மூலம் மாடலிங் வாய்ப்பு கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளனர்.
இந்த விளம்பரங்களை பார்த்து பல பெண்கள் மாடலிங் வாய்ப்பு தேடி அவர்களது வீட்டிற்கு வந்தனர். அவர்களிடம் மாடலிங் ஒத்திகை கற்றுத் தருவதாகவும் கூறியுள்ளனர். அவர்களது வீட்டிலேயே ஆபாச வீடியோக்களை ஒளிபரப்பு செய்வதற்காக பிரத்யேக ஸ்டூடியோ வைத்துள்ளனர். அங்கு 24 மணி நேரமும் 3 பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். மாடலிங் ஒத்திகைக்கு வரும் பெண்களிடம் இணைவழி ஆபாச வீடியோவில் நடித்தால் மாதம் 1 இலட்சத்தில் இருந்து 2 இலட்சம் வரை சம்பளம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி அவர்களை தங்களது வலையில் விழவைத்துவிடுகின்றனர்.
அவ்வாறு தங்களது வலையில் விழும் பெண்களிடம் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்க ஆபாச வீடியோக்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். பாதி முகத்தை மூடியபடி, முழு முகத்தை காட்டுதல், முழு நிர்வாணமாக காட்டுதல் என பல பிரிவுகளில் அப்பெண்களுக்கு வேலை கொடுக்கப்படும்.
மேலும் இந்த வீடியோக்களை இணையத்தில் பார்க்க வாடிக்கையாளர்களிடம் பணம் கட்டி டோக்கன் வாங்கும்படி கூறுகின்றனர். இதில் கிடைக்கும் வருமானத்தில் 75 சதவீதத்தை தம்பதிகள் வைத்துக்கொண்டு 25 சதவீத தொகையை மாடல் அழகிகளுக்கு கொடுத்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களிடம் கிரிப்டோகரன்ஸி மூலம் பணம் வாங்கிக்கொண்டிருந்தனர்.
நெதர்லாந்தில் உள்ள ஒரு வங்கிக்கணக்கிற்கு 7 கோடி ரூபாவை டெக்னிஸ் நிறுவனம் டிரான்ஸ்பர் செய்திருந்தது. இந்த மோசடி மூலம் மொத்தம் 22 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி உள்ளனர். வீட்டில் சோதனை நடத்திய போது அங்கு 8 இலட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஷூட்டிங் எடுத்துக் கொண்டிருந்த மூன்று மாடல் அழகிகளும் இருந்தனர். தொடர் விசாரணையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 400இற்கும் மேற்பட்ட பெண்கள் இந்தத் தொழிலில் தள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆபாச மோசடி இணைய வலையமைப்பு சைப்ரஸ், ஐரோப்பா மற்றும் ஆபிரிக்கா நாடுகள் வரை பரவியுள்ளது. கைதான தம்பதிகள் இருவம் ரஷ்ய நாட்டை சேர்ந்த பாலியல் கும்பலுடன் தொடர்புடையது. டெல்லியை சேர்ந்த வைத்தியரின் வீட்டை வாடகைக்கு எடுத்து அதனை ஸ்டுடியோவாக மாற்றியுள்ளனர். படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்பட்ட நவீன கேமராக்கள், விளக்குகள் மற்றும் பிற உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களின் வங்கி பரிவர்த்தனைகள், வாடிக்கையாளர்கள் போன்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த பாலியல் கும்பலின் பின்னணியில் பொலிவுட்டுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது.
ஏனென்றால் இதற்கு முன்பு பொலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா, கொரோனா காலத்தில் இதுபோன்று வளர்ந்து வரும் நடிகைகள் மற்றும் வேலை கிடைக்காத நடிகைகளை பயன்படுத்தி ஆபாச வீடியோ தயாரித்து இணையவழி ஊடாக வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்ததாக அமுலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பிணையில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கு இன்னும் நீதிமன்ற விசாரணையில் இருந்து வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
![]()