கவிதைகள்
அடிமறி மண்டில ஆசிரியப்பா… கவிதை … சங்கர சுப்பிரமணியன்

(ஒவ்வொரு அடியும் தனித்தனியாய் பொருள்
முடிந்து ஓசை கெடாது அளவடிகளாக இயற்றப்பட்டுள்ளது.)
சுவரோவிய காட்சியும் சிந்திக்க வைக்குதே!
ஆலையிலா ஊரில் இலுப்பை பூவினிப்பே
பாலைவனமதில் ஒரு மரமும் சோலையே
காலையில் மலர்கின்ற தாமரையும் அழகே
மாலையில் மயக்குகிற பொழுதும் இனிதே
பல்லக்கு தூக்குவர் பல்லக்கில் ஏறாரே
சொல்லுக்கு பொருள் தெரியாரும் உளரே
மல்லுக்கு நிற்பதில் மாற்றம் வந்திடாதே
எல்லைக்குள் நின்றால் எதுவும் சிறப்பே
தற்பெருமை கொள்வர் தரணியில் சிலரே
அற்பரும் ஒருநாள் கயமை களைவாரே
கற்றவர் எந்நாளும் அடக்கத்தால் அமரரே
சிற்றோர் என்றுமே சிறப்பின்றி யிருப்பரே
எவரும் வெறுத்திடா மாந்தரும் இங்குண்டே
உவப்ப தலைகூடி உள்ளப்பிரிவர் புலவரே
அவரிவரென குறைகூறா நிற்றலும் பண்பே
சுவரோவிய காட்சியும் சிந்திக்க வைக்குதே!

-சங்கர சுப்பிரமணியன்.
![]()