முச்சந்தி

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதாக கூறிய அரசாங்கத்தின் முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டன 

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை விளையாட வந்துள்ளதாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறினாலும், முதல் 10 ஓவர்கள் முடிவில், அரசாங்கத்தின் பல விக்கெட்டுகள் விழுந்துவிட்டதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு – வெள்ளவத்தை மயூரபதி ஆலயத்தில்  நடைபெற்ற தைப்பொங்கல் சிறப்பு மத வழிபாடுகளில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இன்று எரிபொருள் கட்டணங்கள், மின்சாரக் கட்டணங்கள் அல்லது அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் எதுவாக இருந்தாலும், இவை எதுவும் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை காணமுடிகின்றது.

“நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை விளையாடுகிறோம்” என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் கூறியிருந்தார். முதல் பத்து ஓவர்கள் இப்போது முடிந்துவிட்டன. ஆனால் பல விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம்.

தான் சொன்னதை நிரூபிக்கவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ முடியாத மிகவும் உதவியற்ற நிலையில் ஜனாதிபதி இருப்பதை நாம் காண்கிறோம். பிரதமர் மிகவும் உதவியற்ற சூழ்நிலையில் சிக்கியிருப்பது போல் தெரிகிறது.

மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மீண்டும் நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறார். பொதுப் பயன்பாட்டு ஆணையம் இந்த அரசாங்கத்தின் மீது வலுவான செல்வாக்கைச் செலுத்தி மின்சாரக் கட்டணங்களைக் குறைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஆனால் அரசாங்கம் விலையை குறைக்கத் தயாராக இல்லை. வாகன இறக்குமதியிலிருந்து 280 பில்லியன் வரிகளை வசூலிக்க சுங்கத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது நாட்டு மக்களிடமிருந்தே பெறப்படவுள்ளது.

தேர்தலுக்கு முன்பு அவர்கள் சொன்ன எல்லா விடயங்களுக்கும் பின்னரும் நாட்டில் மருந்து பற்றாக்குறை நீடிக்கின்றது. மருத்துவ மோசடி மீண்டும் நடக்கிறது. டெஸ்ட் போட்டியின் முதல் பத்து ஓவர்கள் விளையாடப்பட்டுவிட்டன.

எவ்வாறாயினும், சரியான நேரம் வரும் போது நாட்டு மக்கள் சிறந்த முடிவுகளை எடுப்பார்கள். எனவே பொறுத்திருந்து பார்ப்போம். தேர்தலுக்கு முன்னதாக பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

உணவுப் பொருட்களின் விலையைக் குறைப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டன, இளைஞர்களுக்கான மோட்டார் சைக்கிள் கனவுகளை நனவாக்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டன.

மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதற்கும், வசூலிக்கப்படும் எரிபொருள் வரியை குறைப்பதற்கும் உறுதியளித்தனர். இவை எங்களுக்கு நன்றாக நினைவில் உள்ளன” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button