விவாதங்களை நசுக்கும் அரசு; இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன வேலைத்திட்டத்தை அரசாங்கம் கடைப்பிடிப்பதை சவாலுக்கு உட்படுத்தும் விவாதங்களை நசுக்கும் செயற்பாடுகளுக்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பிரிவின் அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கம் ஜனவரி 3 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்திற்கு எதிராக எவ்வாறு போராடுவது? என்ற தலைப்பில் விரிவுரையை ஏற்பாடு செய்தபோது சர்ச்சை எழுந்தது.
முன் அனுமதி பெற்ற போதிலும், துணைவேந்தர் அரசாங்கக் கொள்கைகளை எதிர்க்கும் எண்ணத்தைத் தவிர்க்க தலைப்பை மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தியதாகவும் அல்லது நிகழ்வை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டது.
இந்த உத்தரவு ஜனநாயக உரிமைகளின் தெளிவான மீறல் எனவும் இது பல்கலைக்கழகங்களில் கல்வி சுதந்திரத்தின் கொள்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய விரிவுரையில் தலையிடுவதற்கான அறிவுறுத்தல்களை வழங்குவதை மறுத்துள்ள நிலையில், நிகழ்வை இரத்து செய்யும் முடிவில் அரசாங்கத்தின் செல்வாக்கை ஆதாரங்கள் சுட்டிக்காட்டுவதாகவும் துணைவேந்தர் சுதந்திரமாக செயல்பட்டிருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் இலங்கைக்கு சிறந்த சேவை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மீளப் பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்துள்ள நிலையில், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான நிர்வாகம், நவம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதியின் கொள்கை உரையில் கூறியது போன்று சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்திற்கு மாற்றாக விவாதங்களை தணிக்கை செய்வது ஜனநாயக எதிர்ப்பை அடக்கி, நாட்டின் பொருளாதார எதிர்காலம் பற்றிய தேவையான விவாதங்களை தடுக்கும் என எச்சரித்தது. 47 ஆண்டுகால நவதாராளவாதக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை இலங்கை சமாளிக்க வேண்டுமானால், மாற்று வழிகள் குறித்து வெளிப்படையான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
![]()