மியன்மார் அகதிகள் மீண்டும் முல்லைத்தீவுக்கு அனுப்பிவைப்பு

மியன்மார் அகதிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகளை வழங்குவதற்கும், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை அளிப்பதற்குமே முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என வெளி விவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சரும் தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.

மியன்மார் அகதிகள் மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளத்துக்கு நேற்றையதினம்(24) மாலை கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறித்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அகதிகள் என்ற மனிதாபிமானத்தோடு மட்டுமே இவர்களை கையாண்டு கொண்டிருக்கிறோம். இங்கு வேறு எதனையும் நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே இது தொடர்பாக யாரும் குழப்பமடையவோ, கவலை அடையவோ தேவையில்லை.

தேசிய மற்றும் சர்வதேசரீதியான சட்ட திட்டங்களுக்கு ஏற்ப ஒருங்கிணைப்புடன் இவர்களை நாங்கள் கையாண்டு கொண்டிருக்கின்றோம்.

அகதிகள் எவரும் உடல் ரீதியாகவோ உளரீதியாகவோ துன்புறுத்தல்களுக்கோ ஆளாகக் கூடாது என்பதில் மிகக் கவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இவர்கள் விடயம் தொடர்பாக வெளிவகார அமைச்சு, பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்புத் துறை மற்றும் சுகாதாரத்துறை ஆகியன ஒன்றாக இணைந்து பணியாற்றிக் கொண்டு வருகின்றது.

மியன்மார் அகதிகள் விவகாரத்தை , ஒரு சாரார் தங்களுடைய சுய அரசியலுக்காக அகதிகளை சரியாக பராமரிக்கவில்லை என்று கூறுகின்றனர்.

இன்னுமொரு சாரார் அகதிகளுக்கு பிரஜா உரிமையை பெற்றுக் கொடுக்கப் போவதாகவும், இவர்களை சமூகமயப்படுத்த போவதாகவும் தெரிவித்து, கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

எனவே அகதிகளை வைத்து, இனவாதத்தை நாட்டில், மீண்டும் தோற்றுவிக்க முயற்சிக்க வேண்டாம் எனவும், அதேபோன்று அரசியலுக்காகவும் இனவாதத்தை கையில் எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button