முச்சந்தி

அரசியல் அழுத்தத்திற்குள்ளே சிக்கி விடாது தமிழ் தேசமாக ஓர் அணியில் திரண்டெழ வேண்டும்

இயற்கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்து எழுவதை போல் அரசியல் காற்றழுத்தத்திற்குள்ளும் சிக்கிவிடாது தமிழ் தேசமாக தேசியம் காக்க ஓர் அணியில் திரண்டெழ வேண்டிய காலம். இல்லையேல் கரணம் தப்பினால் மரணமே என்பதை நினைவில் கொள்வோம். என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போதைய தொடர் காற்றழுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்து எழும் நாம் தொடரும் காற்றழுத்தங்களுக்கு எம்மை தயார் படுத்துவது போல் அரசியல் காற்றழுத்தத்திற்குள்ளும் சிக்கிவிடாது தமிழ் தேசமாக தேசியம் காக்க ஓர் அணியில் திரண்டெழ வேண்டிய காலகட்டம் இது.

இல்லையேல் கரணம் தப்பினால் மரணமே என்பதை நினைவில் கொள்வோம். நடந்து முடிந்த தேர்தல்களின் அரசியல் காற்றழுத்தத்தை தம்பக்கம் திருப்பியதை போன்று உள்ளூராட்சி மன்ற தேர்தலில் குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகளை தமதாக்க தேசிய மக்கள் சக்தி வகுக்கும் வியூகம் தமிழர்களின் தாயகம் தேசியம் தொடர்பில் எதிர்மறை தாக்கத்தை செலுத்தும் பலப்பரீட்சையாக அமையப் போகின்றது.தாயக தமிழர் அரசியல் தலைமைகளும், சிவில் சமூகமும், பொதுமக்களும் நன்கு உணர்ந்து எதிர்நோக்கும் ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ள பலத்த கூட்டணியாக எம்மை ஆயத்தப்படுத்தல் வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியாகிய மக்கள் விடுதலை முன்னணி தமிழர் தாயகத்தில் கைப்பற்றிய எட்டு ஆசனங்களோடு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தமதாக்கி எதையும் சாதிக்கும் நிலையில் உள்ளது.

அத்தேர்தல் முடிவுகளை தொடர்ந்து தெற்கில் சிங்கள பௌத்த கருத்தியல் கொண்ட இன்நாள் மற்றும் முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருத்துருவாக்கிகளும் வடக்கு கிழக்கில் பிரிவினைவாதம், இனவாதம், தோற்று விட்டது எனக் கூறி எமது 76 வருட அரசியல் கோரிக்கைகள், அதற்கான பேச்சுவார்த்தைகள், போராட்டங்கள் அனைத்தையும் அவமானப்படுத்தி உள்ளமைக்கு தகுந்த பதிலடியை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாம் கொடுக்க வேண்டும்.

பெரும் தேசிய வாத கட்சிகளான தேசிய மக்கள் சக்தி உட்பட ஏனைய கட்சிகள் தமிழர் தாயகத்தின் உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றுவதன் மூலம் “அடிமட்ட கிராமிய மற்றும் நகர்வாழ் தமிழ் மக்கள் தமிழ் அரசியல் தலைமைகளையும், அவர்களின் பாரம்பரிய அரசியலையும், அரசியல் சித்தாந்தங்களையும், விடுதலை போராட்டங்களையும் வெறுக்கிறார்கள்.

சிங்கள பௌத்த ஒற்றை ஆட்சியின் கீழ் அதன் அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் வாழ விரும்புகின்றார்கள்” என உலகிற்கே கூற ஆயத்தமாக உள்ளனர்.

அதுமட்டுமல்ல நடைபெறவுள்ள தேர்தலிலும் பேரினவாத சக்திகள் தமிழர் தாயகத்தில் வெற்றி பெற்றால் நாம் இதுவரை காலம் சர்வதேசத்திடம் கொண்டு செல்லும் இன அழிப்பு இனப்படுகொலை, யுத்தக் குற்றம் தொடர்பாக விசாரணை, வலிந்து காணாமலாகப்பட்டோருக்கான நீதிக் கோரல் என்பதெல்லாம் புதிய மாற்றத்திற்கான அரசாக தம்மை அடையாளப்படுத்தும் தேசிய மக்கள் சக்திக்குள்ளும்,இலங்கை நாட்டுக்குள்ளும் முடக்கப்பட்டுவிடும் அபாயமும் உள்ளது.

இது பேரினவாதத்திற்கு கிடைக்கும் பெரும் வெற்றியாகவும் அமைந்து விடும். இது தோற்கடிக்கப்பட வேண்டும்.

எமது தாயக அரசியல் வரலாற்றில் அரசியல் கொள்கை பிறழ்ந்தவர்களும், பேரினவாத ஆட்சியாளர்கள் கிள்ளிக் கொடுக்கும் சுகங்களில் வாழ்வு கண்டவர்களும், குறிப்பாக கடந்த 15 வருட காலமாக அரச வளங்களில் தமது அபிலாசைகளை பூர்த்தி செய்து கொண்டவர்களும் எமக்குள் பிளவை உருவாக்கி அரசியல் குளிர் காய்ந்தனர். இதனால் நாம் பல பின்னடைவுகளை சந்தித்துள்ளோம். இன்நிலை இனியும் தொடரவிடக்கூடாது.

எமது விடுதலை போராட்ட வரலாற்றில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான போராளிகள் களப்பலியானதும், உயிர்த் தியாகமானதும், இறுதி யுத்தத்தில் இலட்சத்தை தாண்டியோர் படுகொலை செய்யப்பட்டதும் படையினரிடம் கையளிக்கப்பட்ட பல ஆயிரம் பேர் காணாமலாக்கப்பட்டதும்,அரசியல் கைதிகள் விடுதலையின்றி சிறைகளில் வாடுவதும் நாம் ஒற்றை ஆட்சியின் கீழ் அடிமைகளாக வாழ்வதற்கு அல்ல.

மக்கள் விடுதலை முன்னணியினால் பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமையோடு அமைந்த சமஷ்டி அரசியல் அமைப்பு எனும் கருத்தியலே எமது அரசியல். இதற்கு எந்த வகையிலும் பங்கம் ஏற்படுத்த இடமளிக்க முடியாது. மக்கள் பலத்தோடு முன்னோக்கி நகர்த்தும் பாரிய காலக்கடமை எம்முன் உள்ளது.

தற்போதைய அரசியல் அபாய நிலை உணர்ந்து நாடாளுமன்ற கட்சிகளான தமிழ் தேசிய முன்னணி, தமிழரசு கட்சி,டெலே ஆகிய தலைமை தலைமைகளுக்கிடையில் ஆரம்பித்திருக்கும் கலந்துரையாடல் வலிமை பெறல் வேண்டும். தமிழ் மக்கள் பேரவை முன்வைத்த தீர்வு யோசனைகளை மையப் புள்ளியாய் கொண்டு கலந்துரையாடல் முன்னோக்கி நகர்த்தப்படுவதை தமிழ் தேசிய ஆர்வலர்கள், உணர்வாளர்கள் வரவேற்கின்றனர்.

இக்கூட்டு செயற்பாடு பொது வெளியிலும் அவசரமாக விரிவடைய வேண்டும்.கடந்த கால தோல்விகள், ஏமாற்றங்கள் எந்த வகையிலும் தாக்கம் செலுத்த இடம் அளிக்கக்கூடாது. எமக்கிடையே அரசியல் பகைமையை வளர்க்கும் காலம் இதுவல்ல. அரசியல் தலைமைத்துவங்களுக்கிடையிலும் கட்சிகளுக்கிடையிலுமான தனித்தோடும் போட்டியில் மக்கள் தோல்வி காண்பது என்பது நாமே எம் அரசியலை கொலை செய்வதற்கு ஒப்பாகும். அதுமட்டுமல்ல அதுவே இறுதி இன அழிப்பிற்குள் எமை தள்ளுவதோடு நாமே குற்றவாளிகளாகி விடுவோம் என்பதையும் மறக்கக்கூடாது.

நாட்டின் அரசியல் களநிலை எதிர்வரும் காலங்களில் நமக்கு உகந்ததாக அமையப்போவதில்லை. இதற்கு முகம் கொடுக்க தமிழ் தேசமாக மீள எம்மை பலப்படுத்தி எழுச்சி கொள்ள வேண்டும்.

தற்போது கட்சிகள் இடையில் ஆரம்பித்திருக்கும் முதற்கட்ட பேச்சுவார்த்தை மேலும் பலமடையவும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் வடக்கு கிழக்கு எங்கும் பொதுமக்கள் மத்தியிலும் கலந்துரையாடல் தீர்க்கமான முடிவை எட்ட ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தை வெற்றியடைந்து உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கும் முன்னர் கூட்டுத் தன்மையை போட்டியிடும் கட்சிகள் வெளிப்படுத்தினால் மாவீரர் வாரத்திலும் மாவீரர் நினைவேந்தல் தினத்திலும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது வீடுகளிலும் மாவீரர் துயிலும் இல்லங்களிலும் விளக்கேற்றிய மக்கள் தெற்கிற்கு வழங்கி செய்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் வெளிப்படுத்தி எமது அரசியல் உருதிப்பாட்டை தெற்கிற்கு வெளிப்படுத்துவோம். காலம் கடத்தாது எமது காலக்கடவையை நிறைவேற்றுவோம்- என்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button