Advertisementsசங்கதிகள்தேர்தல் களம்முச்சந்தி

தேங்காய் தட்டுப்பாட்டுக்கு குரங்குகள் மீது பழி சுமத்தி தப்பித்துக்கொள்ள அரசாங்கம் முயற்சி

தேங்காய் தட்டுப்பாட்டுக்கு குரங்குகள் மீது பழிசுமத்தி தப்பித்துக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது. விளைச்சல் அதிகமாக கிடைக்கப் பெற்றது ஆனால் சந்தையில் பொருட்கள் இல்லை.

நடைமுறைக்கு சாத்தியமற்ற காரணிகளை குறிப்பிடுவதை விடுத்து பொறுப்புடன் செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறேன் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில்   நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சந்தையில் அரிசி மற்றும் தேங்காய் ஆகிய அத்தியாவசிய உணவு பொருட்களுக்கான தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது. தட்டுப்பாட்டுக்கான காரணம் குறித்து அரசாங்கம் முன்வைக்கும் விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

உற்பத்தி செய்யப்படும் அரிசி மற்றும் விநியோகம் தொடர்பான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் எடுத்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.

100 கிலோகிராம் நெல்லில் இருந்து 62 கிலோகிராம் அரிசியை உற்பத்தி செய்ய முடியும் என்று பிரதான அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மறுபுறம் விவசாயத்துறை அமைச்சு 100 கிலோகிராம் நெல்லில் இருந்து 68 கிலோகிராம் அரிசி உற்பத்தி செய்ய முடியும் என்று குறிப்பிடுகிறது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி பிரிவின் பேராசிரியர் மாரம்பே உட்பட ஆராய்ச்சியாளர்கள் 72 கிலோகிராம் அரிசி என்றும், சிறு ஆலை உரிமையாளர்கள் 52 கிலோ பெற முடியும் என்று குறிப்பிடுகிறார்கள்.

மாறுப்பட்ட கருத்துக்களின் ஊடாக அரிசி விநியோகம் மற்றும் மொத்த கொள்வனவு தொடர்பில் அமைச்சருக்கோ, ஜனாதிபதிக்கோ போதுமான தெளிவு கிடையாது.

உணவு பாதுகாப்பு தொடர்பான முழுமையான அதிகாரம் வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

காட்டு யானைகளின் தாக்கத்தினால் பயிர்செய்கை நாசமடைந்து விட்டன. மாபியாக்கள் உணவு பொருட்களை பதுக்கி வைத்து விட்டனர் என்று பொறுப்பில்லாமல் பதிலளிக்க கூடாது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவு பொருட்கள் ஊடாக இடம்பெறும் மோசடிகளை இந்த அரசாங்கம் இலகுப்படுத்தியுள்ளது.

மோசடியாளர்களுக்கு சாதகமான வகையில் இறக்குமதிக்கான வரையறைகளை நீக்கியுள்ளது. நாட்டு மக்களின் நிலை கருதி உரிய கவனம் செலுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம்.

தேங்காய் தட்டுப்பாட்டுக்கு குரங்கு தொல்லை காரணம் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. பயிர்ச்செய்கைகளுக்கு காட்டு விலங்குகளினால் பாதிப்பு ஏற்படுவதை ஏற்றுக் கொள்கிறோம்.

இருப்பினும் தேங்காய் தட்டுப்பாட்டுக்கு முற்றுமுழுவதுமாக குரங்குகளின் மீது பழி சுமத்த முடியாது. மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கட்சியில் இருக்கும் போது அடிப்படை பிரச்சினைகளுக்கு தாம் 24 மணித்தியாலத்துக்குள் தீர்வு காண்பதாக குறிப்பிட்டனர். ஆகவே வார்த்தையால் குறிப்பிட்ட துரிதத்தை செயலால் காண்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button