கவிதைகள்

பாரதி தமிழன்னைச் சொத்தாகும் !… கவிதை… ஜெயராமசர்மா

தாய் நாட்டின் விடுதலைக்காய்
தமிழெடுத்துக் கவி பாடி
தலை நிமிர்ந்த கவிமன்னன்
தான் எங்கள் பாரதியே
ஓய் வறியாக் கொடுத்தானே
உணர்வு எழச் செய்தானே
தாய் மண்ணை நேசித்தே
தன் வாழ்வை மறந்தானே !

பெண் போற்றி வாழ்ந்தானே
மண் போற்றி நின்றானே
தன் துன்பம் மறந்தானே
தமிழ் எண்ணி நின்றானே
பொன் பற்றி எண்ணாமல்
பொழுது எல்லாம் தாயகத்தின்
விடிவுதனை மனம் எண்ணி
வெகுண் டெழுந்தான் பாரதியும் !

பன் மொழிகள் கற்றான்
பன் நூல்கள் கற்றான்
என்றாலும் தமிழ் மொழியே
இனிமை எனச் சொன்னான்
தமிழ் என்று சொன்னாலே
அமிழ் தூறும் என்றான்
அவன் வார்த்தை அகமிருத்தி
அவன் நினைவில் நிற்போம் !

பாரதி பக்தி பக்குவமாகும்
பராசக்தி பாரதி முக்கியமாகும்
துணிவே பாரதி முதலேயாகும்
அதுவே சக்தி வரமேயாகும்
நித்தம் துதித்தான் சக்தியை
நிறுத்தினான் மூடப் பக்தியை
நம்பினான் பாரதி சக்தியை
நாட்டையே சக்தியாய் பார்த்தனன் !

பாரதி பாடாப் பொருளில்லை
பாரதி பார்க்காத் திசையில்லை
பாரதி சிந்திக்காக் கருவில்லை
பாரதி தமிழன்னைச் சொத்தாகும்
பாரதி என்றாலே தன்மானம்
பாரதி என்றாலே தமிழுணர்வு
பாரதி என்றாலே துணிவாகும்
பாரதி தமிழுக்கே உயிராகும் !

புரட்சி என்றால் பாரதி
புதுமை என்றால் பாரதி
வரட்சி இல்லா கவிதைகளை
வாரி வழங்கினான் பாரதி
முயற்சி என்றால் பாரதி
முழுமை என்றால் பாரதி
அயர்ச்சி இல்லா பாரதி
அவனை அகத்தில் அமர்த்திடுவோம் !

 

 

 

 

 

 

 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *