பெருந்தோட்ட வாக்காளர்களிடையே கள்ளு விநியோகம்; தேர்தல்கள் ஆணைக்குழு விசேட பரிசோதனை

ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்களை தம்பக்கம் ஈர்க்கும் நோக்கில் சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் பெருந்தோட்ட வாக்காளர்களிடையே பெருந்தொகையான கள்ளு போத்தல்களை விநியோகித்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட பரிசோதனையை ஆரம்பித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், குறித்த விசேட பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு பெற்றுக்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் வெவ்வேறான அமைப்புகள் இவ்வாறு பெருந்தொகையான கள்ளு போத்தல்களை விநியோகித்துள்ள நிலையில் அதற்காக அந்த பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாளாந்தம் வேலைக்கு வருவது குறைவடைந்துள்ளதாக பெருந்தோட்ட உரிமையாளர்கள் தெரிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களாக பெருந்தோட்ட வாக்காளர்களிடையே இவ்வாறு பெருந்தொகையான கள்ளு விநியோகிப்பட்டு வந்துள்ள நிலையில் அவர்கள் முரண்பாடான முறையில் நடந்துக் கொள்வதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் நிர்வாக தலைவர் மஞ்சுல கஜநாயக்க இந்த முறைப்பாட்டை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்னிலைப்படுத்தியுள்ளார்.

தரமற்ற கள்ளு போத்தல்களை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு விநியோகிப்பதன் மூலம் அவர்கள் வேலைக்கு சமூகமளிப்பது குறைவடைந்துள்ளதாக பெருந்தோட்ட உரிமையாளர்கள் தனது நிறுவனத்திடம் முறைப்பாடு வழங்கியதாக மஞ்சுல கஜநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button