பாகிஸ்தானில் பேஸ்புக் – இன்ஸ்டாகிராமிற்கு தடை: நீடிக்கும் கட்டுப்பாடுகள்
சமூக ஊடகங்கள் ஆறு மாதங்களாக தடைசெய்யப்பட்டுள்ள பின்னணியில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கான அணுகலைக் கட்டுப்படுத்தி, சமூக ஊடகங்கள் மீதான தனது அடக்குமுறையை பாகிஸ்தான் அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், புதிய கட்டுப்பாடுகள் குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) மற்றும் இராணுவ அமைப்பு ஆகியவற்றுக்கு இடையேயான பதட்டங்களுக்கு மத்தியில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கான அணுகல் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு நிறுவனமான நயாடெல் தெரிவித்துள்ளது.
அத்துடன், பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையத்தின் விளக்கத்திற்காக காத்திருப்பதாகவும் அந்த நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் மற்றும் துணைப் பிரதமர் இஷாக் தார் உட்பட இராணுவம் மற்றும் அரசாங்க அதிகாரிகள் சமூக ஊடகங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை பரிந்துரைத்துள்ளனர்.
இது தவறான தகவல் மற்றும் வன்முறையின் ஆதாரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், புதிய கட்டுப்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்த பிடிஐ, பேச்சு சுதந்திரம் மற்றும் தகவல் சுதந்திரம் ஆகியவை அடிப்படை உரிமைகள் என்று வலியுறுத்தியது.
![]()