‘ஒரு நாளைக்கு 14 மணி நேர வேலை’;  ஊழியர்கள் கடும் எதிர்ப்பு

கர்நாடகாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக நீட்டிக்கக் கோரி மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ஐடி ஊழியர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “மனிதாபிமானமற்ற செயல் இது” எனக் கூறியுள்ள ஐடி ஊழியர்கள், கூடுதல் பணிநேரங்களால் ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் மற்றும் பணிநீக்கம் குறித்தும் கவலை தெரிவித்துள்ளனர்.

கர்நாடகா கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம், 1961-ஐ திருத்துவது குறித்து அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் தான், இந்த திருத்தத்தில் ஐடி நிறுவன ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக (12 மணி நேரம் + 2 மணி நேரம் கூடுதல் நேரம்) என திருத்தம் செய்ய வேண்டும் என்ற முன்மொழிவை ஐடி நிறுவனங்கள் கொடுத்துள்ளன.

தற்போது, ​​தொழிலாளர் சட்டங்கள் 12 மணி நேரம் (10 மணி நேரம் + 2 மணி நேரம் கூடுதல் நேரம்) என்ற வகையில் வேலை நேரத்தை அனுமதிக்கின்றன. ஆனால், IT துறையின் புதிய முன்மொழிவில், “IT/ITeS/BPO ஆகிய துறையில் உள்ள பணியாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்ய வேண்டும் அல்லது வேலை செய்ய அனுமதிக்கப்படலாம். அல்லது மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக 125 மணி நேரத்துக்கு மேல் வேலைநேரம் இருக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு இந்த கோரிக்கைகள் தொடர்பாக முதல் ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளது என்றும், விரைவில் அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றும், அமைச்சரவையில் இதுகுறித்து விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐடி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு: வேலை நேரத்தை நீட்டிக்கும் ஐடி நிறுவனங்களின் முன்மொழிவுக்கு, ஊழியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளன. கர்நாடக மாநில ஐடி ஊழியர் சங்கமான KITU, “இந்த சட்டத் திருத்தம், தற்போது நடைமுறையில் உள்ள மூன்று ஷிப்ட் முறைக்கு பதிலாக இரண்டு ஷிப்ட் என்ற அடிப்படையில் நிறுவனங்களை செயல்பட அனுமதிக்கும். இதனால், மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்படும் அபாயம் உண்டு.

ஐடி துறையில் 45 சதவீத ஊழியர்கள் மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்சினைகளையும், 55 சதவீத பேர் உடல் ஆரோக்கிய பாதிப்புகளையும் எதிர்கொள்கின்றனர். இதற்கிடையே, வேலை நேரத்தை மேலும் அதிகரித்தால் இந்த நிலைமை மேலும் மோசமாகும். அரசு ஊழியர்களை மனிதர்களாகப் பார்க்காமல் வெறும் இயந்திரங்களாகப் பார்க்கிறது. தொழிலாளர்களை மனிதர்களாகக் கருத கர்நாடக அரசு தயாராக இல்லை என்பதையே இந்தச் சட்டத் திருத்தம் காட்டுகிறது. மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்கும் இயந்திரமாக மட்டுமே ஐடி ஊழியர்களை இந்த அரசு கருதுகிறது” என்று கடுமையாக எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி, “இந்தியாவில் வேலை சார்ந்த உற்பத்தித்திறன் உலக அளவில் குறைவாக உள்ளது. அதன் காரணமாக இளைஞர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என” கூறியது மிகப்பெரிய விவாதப் பொருளானது. இந்நிலையில் கர்நாடக அரசுக்கு ஐடி துறை வைத்துள்ள 14 மணி நேர வேலை கோரிக்கை மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button