மட்டக்களப்பில் பாரிய ஆயுதக் கிடங்கு பெருமளவு வெடி பொருட்கள் மீட்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் (10) மாலை பாரிய ஆயுதக்கிடங்கு தோண்டப்பட்டதுடன் அங்கிருந்து பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைக்காடு பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது 20ஆயிரம் ரி56ரக துப்பாக்கி ரவைகளும், 300 மிதிவெடிகள் மற்றும் கண்ணி வெடிகளும் , 38 வெடி மருந்துப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
விசேட அதிரடைப் படையின் பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் வர்ண ஜயசுந்தரவின் கீழான அம்பாறை கட்டளைத்தளபதி உதவி கட்டளை அதிகாரி பீ.குணசிறியின் தலைமையின் கீழானதுமான மட்டக்களப்பு மாவட்ட விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி டபிள்யு ஏ.ஏ.பி.சம்பத் குமாரவுக்கு கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் இந்த அகழ்வு இடம்பெற்றது.
வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.ஜி. லக்மல் குமார, கல்லடி , களுவாஞ்சிகுடி, வவுணதீவு பிரிவுகளின் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த அகழ்வை மேற்கொண்டனர்.
இதன்போதே மேற்படி வெடிபொருட்கள் மீட்கப்பட்டது.ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய இந்த அகழ்வு இடம்பெற்றதுடன், வெடிப்பொருட்களை கரடியனாறு பொலிசார் பொறுப்பேற்று நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கவுள்ளனர்.
![]()