முச்சந்தி

“சிங்க கொடியை தூக்கி காட்டி சேர்ந்து வாழ்வோம்“: உலகறிய சொன்னவர் சம்பந்தன்

”தான் முதலில் ஒரு இலங்கையன். அப்புறம் தமிழன். ஆனால், சிங்கள பெளத்த இலங்கையன் அல்ல. சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற “பல்லின-பன்மொழி-பன்மத” இலங்கையன். பன்மைத்துவம் என்ற அடிப்படையில் சேர்ந்து வாழ்வோம் என்று உலகறிய சொன்னவர். அப்படி சொல்லி சிங்க கொடியையும் யாழ். மேடையில் தூக்கி காட்டியவர். அதற்காக தமிழ் தேசிய வாதிகளால் கடுமையாக விமர்சிக்க பட்டவர்.

எல்லாவற்றையும் மீறி நல்லாட்சி காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நம்பி இரண்டு வருடத்துக்கு குறையாமல், வழிகாட்டல் குழுவில் அமர்ந்து, புதிய அரசியலமைப்பை எழுதி முடிக்க பாடு பட்டவர்.

அதை நம்பி ‘தீபாவளிக்கு தீர்வு’, ‘பொங்கலுக்கு தீர்வு’ என்று கெடு கூறி அதற்காகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டவரே மறைந்த தலைவர் இரா.சம்பந்தன்” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

தமது இரங்கல் செய்தியில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

“அறிவு, ஆன்மா, உடல் என்ற மனித கூறுகளில், உடலால் மட்டுமே பலவீனமாக இறுதி காலத்தில் இருந்தார். அறிவும், ஆன்மாவும் பலம் இழக்கவே இல்லை.

நான் அவரது கட்சி அங்கத்தவன் இல்லை. ஆனால், இந்த சிங்க கொடி முதல் வழி காட்டல் குழு சம்பவங்கள் வரை எல்லாவற்றையும் அவருக்கு மிக பக்கத்தில் இருந்து நேரடியாக பார்த்தவன்.

அவரை மதித்து, அவரை பயன்படுத்தி, பிரிபடாத இலங்கைக்குள் தீர்வு தேட தவறிய அனைத்து சிங்கள பெளத்த தேசிய கட்சிகளின் தலைவர்களும் இப்போது வரிசையாக வந்து, இரா சம்பந்தனுடன் எனக்கு முப்பது வருட பழக்கம், நாற்பது வருட பழக்கம், ஐம்பது வருட பழக்கம் என்று அளப்பார்கள்.

அதையும் உங்கள் சாகாத ஆன்மா எங்கோ இருந்த படி கேட்க போகிறது சம்பந்தன் ஐயா.” என்றும் மனோ கணேசன் தமது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button