மீள் நிர்மாணம் செய்யவிருக்கும் ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை; கடும் வெப்பத்தால் நேர்ந்த கதி
ஐக்கிய அமெரிக்காவில் கடுமையான வெயில் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல புதுமையான விடயங்களும் அவ்வப்போது இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.
இதனடிப்படையில், கடந்த வார இறுதியில் 100 பாகை செல்சியசாக இருந்ததில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகிவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
6 அடி உயரம் கொண்ட குறித்த மெழுகு சிலையின் தலை பகுதி முதலில் உருகியுள்ளது. தொடர்ந்து கால்கல் உருகியுள்ளன. குறித்த சம்பவத்தை பலர் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியும் வருகின்றனர்.
இரண்டு நாட்கள் கழித்து உடற்பகுதியில் இருந்து பல பகுதிகள் கரைந்து செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பதால் அதிக வெப்பம் கொண்ட நாடுகளின் பட்டியலில் சாதனைகளை அமெரிக்கா முறியடித்து வருவதாகவும் சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிலையை உருவாக்கிய CulturalDC என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
“எங்களின் ஊழியர்கள் முன்னாள் ஜனாதிபதியின் தலை உடைந்து கீழே விழக்கூடாது என்பதற்காக முன் ஆயத்த வேலைகளை மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 3000 பவுன்ட் எடை கொண்ட குறித்த சிலை, முற்றாக உருக்கப்பட்டு மீண்டும் வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியாக இருந்தார். அமெரிக்காவில் அடிமை முறையை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை லிங்கனுக்கு உண்டு. அவர் 1861 முதல் 1865 வரை ஜனாதிபதியாக இருந்தார்.
இதனை நினைவுபடுத்தும் விதமாகவே குறித்த சிலை வடிவமைக்கப்பட்டது.
அமெரிக்காவில் தற்போது பல பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது.
இதனால் மத்திய மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் வசிக்கும் மக்களை இந்த மாதம் வெப்பத்தை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு அமெரிக்காவின் வானிலை திணைக்களம் எச்சரித்துள்ளது.

![]()
