தமிழரசுக்கட்சிக்குள் விக்ரம் வேதா!! பிளவுபடுகிறதா தமிழரசுக்கட்சி?
இலங்கைத் தமிழரசுக்கட்சி கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று அணிகளாக பிளவடைந்து வருவதாக அந்தக் கட்சியின் நிர்வாகிகள் கூறுகின்றார்கள்.
எப்படி என்று கேட்கிறீர்களா?
கட்சிக்குள் நடப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்ற வெட்டுக்குத்துத் தகவல்களைத் தருகிறோம்.. நீங்களே பாருங்கள்..
கட்சிக்குள் ‘மாவை அணி’ என்றும் ‘சுமந்திரன் அணி’ என்றும் ‘தமிழ் தேசியத்திற்கான அணி’ என்றும் மூன்று அணிகள் செயற்படுகின்றனவாம்.
மாவையைப் பொறுத்தவரை தனது மகனை அதிகாரத்தில் அமர்த்துவதை விட வேறு எந்தக் குறிக்கோளும் இருப்பதாகத் தெரியவில்லை என்று குற்றம் சுமத்திவருகின்றார் கட்சியின் ஒரு சிரேஷ்ட உபதலைவர்.
மாவையால் கட்சியைத் தலைமைதாங்கமுடியாது. கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்பது சுமந்திரனின் நோக்கமாம்.
உள்ளூராட்சிசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல்களில் அனேகமானவை யாழ்ப்பாணம் மார்டின் வீதியிலுள்ள கட்சியின் காரியாலயத்தில் இடம்பெறவில்லையாம். மாறாக 1ம் குறுக்குத்தெருவிலுள்ள சுமந்திரன் வீட்டில்தானாம் இடம்பெற்றன.
யாழ்ப்பாணம் நல்லூர், வட்டுக்கோட்டை, தீவகம்- இந்தத் தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் மாத்திரம்தான் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டதாம்.
கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கூட மாவை ஓரங்கட்டப்பட்டதாகவே கட்சிக்குள் பேச்சடிபடுகின்றது.
வடமாராட்சி, தென்மாராட்சி, வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு, தென்மேற்கு தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல்கள் அனைத்துமே கட்சித் தலைமையில் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாமல், நேரடியாக சுமந்திரனினால்தான் மேற்கொள்ளப்பட்டனவாம்.
சுமந்திரனை வெட்டி அடக்குவதற்காக மாவை செய்த சில சதிகள் சுமந்திரனுக்கு தெரியவந்ததன் காரணமாகவே மாவையை ஒதுக்கிவைத்துவிட்டு சுமந்திரன் தன்னிச்சையாகச் செயற்பட ஆரம்பித்தாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுமந்திரனைப் பற்றி சம்பந்தரிடம் மாவை ஏதோ முறைப்பாடு செய்யப்போக, சம்பந்தர் அதனை சுமந்திரனிடம் போட்டுக்கொடுத்ததால் ஏற்பட்ட பிரச்சனைதான் இரண்டு பேருக்கும் இடையிலான முரண்பாடுகளுக்குக் காரணம் என்றும் சில தரப்புக்கள் கூறுகின்றன.
கட்சி அலுவலகத்தில் மாவையால் நடாத்தப்பட்ட தொகுதிக் கிளைச் செயலாளர்களின் கூட்டத்தை சுமந்திரனின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகின்ற பருத்தித்துறைத் தொகுதி செயலாளரும், தென்மாராட்சித் தொகுதிச் செயலாளரும் புறக்கணித்ததாகத் தெரியவருகின்றது.
இந்த இரண்டு தொகுதிச் செயலாளர்கள் உட்பட சுமந்திரனுக்கு ஆதரவாகச் செயற்படுகின்ற தொகுதிச் செயலாளர்கள் நூற்றுக்கணக்கில் புதிய அங்கத்தினர்களை கட்சியில் இணைத்து வருவதாகவும், மிக அண்மையில் புதிய அங்கத்தினர் தொகை என்று கூறி இரண்டு இலட்சம் ரூபாய் பணத்தை கட்சி பொருளாளரிடம் கையளித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
பொதுக்கூட்டத்தில் சுமந்திரனுக்கு வலுச்சேர்ப்பதற்காகவே அந்த ஆட்சேர்ப்பு நடைபெறுவதாகவும் கட்சிக்குள் பேச்சடிபடுகின்றது.
சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரன் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டதாலும் பிளவுகள் மோசமடைந்து வருகின்றன. •
மாவைக்கு வித்தியாதரனை பிடிக்கவே பிடிக்காது. வடமாகாணசபைத் தேர்தலில் வித்தியாதரனுக்கும் மாவைக்கும் இடையே முதலமைச்சர் பதவிக்காகக் காணப்பட்ட இழுபறியினால் ஏற்பட்ட காழ்ப்புணர்வாம்.
மேயர் பதவி தருவதாகக் கூறியே வித்தியாதரன் தேர்தலில் போட்டிபோடவைக்கப்பட்டுள்ளார். ஆனால் கத்தோலிக்க ஆயரின் வேண்டுகோளின் பெயரில் திடீரென்று ஆனோல்ட்டுக்கு மேயர் பதவி வழங்குவதற்கு சுமந்திரன் முடிவெடுக்க, சீ.வீ.கே சிவஞானம் வித்தியாதரனுக்காக களமிறங்கிப் போராடி அங்கேயும் இழுபறி ஏற்பட்டுள்ளதாம்.
இவை அனைத்தும் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் போன்றோர் என்னசெய்வது என்று புரியாமல் கலங்கி போய் நிற்கின்ற தரப்புடன் தங்களை இணைத்துக்கொண்டிருக்கின்றார்களாம்.
நீங்கள் எந்த அணி என்று ஒருவர் அவர்களிடம் கேட்க, “.. நாங்கள் தமிழ் தேசியத்துக்கான அணி..” என்று பதில் கூறினார்களாம்.
அப்படியென்றால் சுமந்திரனும் மாவையும்..???
![]()