குடும்பங்களை மிரட்டும் ‛’வாட்ஸ் ஆப், ஆடியோ’ புகார்கள்; உறவுகளுக்குள் நம்பகத்தன்மை குறைந்து வருகிறதா
குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாவட்ட சமூகநலத்துறைக்கு வரும் புகார்களில் 20 சதவீதம், ‘வாட்ஸ் ஆப், ஆடியோ’ புகார்களாக வருவது அதிகரித்துள்ளது.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டதாக மாதந்தோறும் 25 முதல் 30 பேர் வரை மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தை தேடி வருகின்றனர். இதில் குடிப்பழக்கம், தவறான தொடர்பு போன்ற பிரச்னைகளே அதிகம். தவறான தொடர்பில் இருந்தால் தண்டனை வழங்குவதை எதிர்பார்க்க முடியாது. குடும்ப வன்முறை சட்டத்தில் உரிமைகளையும் பாதுகாப்பையும் பெற்றுத்தர முடியும். ஜீவனாம்சம் பெறவே வழியுள்ளது.
சமீபகாலமாக கணவன், மனைவிக்கு இடையே வேறொரு நபருடன் பேசுவது, பழகுவது போன்ற ‘பேஸ்புக், வாட்ஸ் ஆப்’ புகார்கள் அதிகரித்துள்ளன. புகார் செய்ய வரும்போதே அதற்கான ஆடியோ, வீடியோ, சாட்டிங் பதிவுகளை ஆவணமாக கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி குடும்ப உறவுகளுக்குள் ஒருவரிடம் ஒருவர் பேசும் போது, அதையும் பதிவு செய்து ஆடியோவாக கொண்டு வரும் போக்கு அதிகரித்துள்ளது.
இப்படிச் செய்வதால் கணவன், மனைவிக்கு இடையே நம்பிக்கையின்மை அதிகரித்து குடும்ப உறவில் விரிசல் ஏற்படுவதாக மனநல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது: பேஸ்புக்கில் தனது போட்டோ, நண்பர்களுடன் சேர்ந்திருக்கும் போட்டோ வெளியிடும் போது அதை ஆவணமாக்கி காட்டுவது வேதனையானது. இதை பெண்கள் தவிர்க்க வேண்டும்.
வீட்டு விஷயம் புகாராக வெளியே வரும் போது குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பள்ளிகளில் கவுன்சிலர்கள் மூலம் குழந்தைகளின் மனநிலையை மாற்ற முயற்சிக்கிறோம்.
அவர்களை பிரச்னையிலிருந்து வெளிவர வைப்பது தான் வேலை. அப்போது தான் பள்ளிப்படிப்பில் கவனம் செலுத்த முடியும். ஒருவருக்கு ஒருவர் புரிதல் குறைவால் இப்பிரச்னை அதிகரித்துள்ளது. இதை பேசி சரிசெய்தாலே தீர்ந்து விடும், என்கின்றனர்.
![]()