அவனா இவன்?…. ( சிறுகதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன் என்பதுபோல் முன்பொருநாள்இணைந்திருந்த திக்கெட்டும் புகழ் மணக்கும் சீமையின் ஒரு வட்டத்திலுள்ளசிற்றூரில் பிறந்தவனின் கதை. வளமோடு வறுமையின் நிழல் படராத குடும்பம். அப்போது எதிர்பாரா விதமாக அந்நாட்டின் அரசு கொண்டுவந்த ஒரு திட்டம்சொந்தமாக செய்துவந்த அவனது அப்பாவின் தொழிலில்தாங்கமுடியா இழப்பை ஏற்படுத்தியது. நாட்கள் செல்லச்செல்ல குடும்பத்தில் வறுமையின் சுவடு படிய ஆரம்பித்தது.ஆரம்பக்கல்வி முடித்திருந்த அவன் மேல்நிலைப் பள்ளி படிக்க வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. அப்போது அவனை இன்னொரு சிற்றூரிலிருந்த தாய்வழித் தாத்தா அழைத்துச்சென்று அருகிலுள்ள நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியில் படிக்க வைத்தார்.தாத்தாவின் உதவியால் பள்ளி இறுதித் தேர்வில் வென்றவனுக்கு மேற்கொண்டு படிக்க முடியாமல் இயற்கையும் சதி செய்தது. அவனது தந்தை இயற்கை எய்ததினால்குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. எதிர்காலம் இருண்டு தெரிய வாழ்க்கையை நோக்கி ஓடலானான். மாதம் முப்பது ரூபாய் சம்பளத்தில் அம்மாவட்ட தலைநகரில் இருந்த நாளேடு ஒன்றில் ஆபீஸ்பாய் வேலையில் சேர்ந்தான். தினமும் தாத்தா ஊரிலிருந்து வேலைக்கு சென்றுவர இருபது கிலோமீட்டர் நடக்கவேண்டும்.அருகிலிருந்த ஊரிலிருந்து பேருந்து வசதி இருந்தாலும் பேருந்து கட்டணம் குடும்பத்துக்கு உதவுமே என்ற காரணத்தால்ந நடந்தே வேலைக்கு சென்றான். தினமும் நடந்ததால் அவனுக்கு கால் வலிக்கும். அவனது தாய் அவன் காலைப்பிடித்து விடுவாள். எவ்வளவு தடுத்தும் கேட்கமாட்டாள். புராணக் கதைகளில் சொல்வார்களே இறைவனே வந்து தொண்டனுக்கு தொண்டாற்றுவான் என்று. அதுபோல் அவனை ஈன்ற தெய்வம் பக்தையானது.வேலை என்னவோ ஆபீஸ்பாய் வேலை என்றாலும் பக்கத்து உணவகத்திலிருந்து காபி, சாப்பாடு வாங்கி வருவதிலிருந்து உதவி மேலாளர் வரை அனைத்து வேலைகளையும் அவன் பார்த்தான். உதவி மேலாளர் வேலையை பார்த்தானா? என்று நீங்கள் புருவங்களை உயர்த்துவது எனக்குபுரிகிறது. அவன் சொன்னதைத்தான் என்னால் எழுத்துடியும்.நாளேடு என்பதால் கவிதை, கட்டுரை, மற்றும் கதைகளை வாசித்து முடிவெடுக்கும் அதிகாரம் வரை அவனுக்கிருந்தது. கையொப்பம் மட்டும் உதவி மேலாளர்இடுவார். அதை அப்படியே அச்சகம் எடுத்துச் சென்று அச்சானதையும் பிழைதிருத்தத்தையும் அவனே செய்வான். அச்சாகிய படைப்பை மட்டும் அல்லாமல் எல்லா பக்கங்களுக்கும் பிழை திருத்தம் செய்வான். அப்படியொரு கெட்டிக்காரன். கெட்டிக்காரனா அல்லது இழித்தவாயனா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். ஆனால் சம்பளம் மட்டும் ஆபீஸ்பாய் சம்பளம்தான்.அந்த நாளேட்டில் அவன் பணிபுரிந்த நேரம் வெளி மகாணம் ஒன்றில் இருந்து அவன் உறவினர் ஒருவர் அந்த நாளேட்டின் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவரதுகுடும்பத்துக்கும் அவனது குடும்பத்துக்கும் அவனது சிறுவயது முதலே தொடர்பு இல்லை. அவனது தந்தை இறந்த துக்கம் கேட்க அவர் வந்தபின்னரே உறவு தொடர்ந்தது.அவனது பரிதாப நிலையைப் பார்த்த அவர்அவனை அவருடன் அழைத்துச் சென்றார். அவர் பணியாற்றிய தொழிற்சாலையின் பயிற்சிக் கூடத்தில் தொழிற்கல்வி கற்பிப்பவராக இருந்தார். அங்கேயே நான்கு ஆண்டுகள் தொழிற்கல்வி கற்றுமுடித்து பணியிலும் சேரந்தான். அங்கு பணிபுரிந்தபடியே பகுதி நேரத்தில் இயந்திர பொறியியல் கற்று தேர்வடைந்தான்.படிப்படியாக முன்னேறி வேறொரு நாட்டுக்கும் வந்துசேர்ந்தான். பணிபுரிந்து ஓய்வுபெற்று குடும்பத்துடன் நிரந்தரமாகஅந்நாட்டிலேயே வாழ்ந்து வருகிறான். வாழ்க்கையின் தேடல் புலம்பெயரவைத்தது. தமிழ்நாட்டில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து உண்ண நல்ல உணவும் உடுத்த நல்ல ஆடையுமின்றி எதிர்காலமே இருண்டிருக்க என்ன செய்வதென்று புரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தபோது அவனுக்கு அவர் செய்த உதவிதான் இன்று அவன் வாழும் வாழ்க்கை.இதை அவனுக்கு இன்றுவரை திருக்குறளின் எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்ற குறள் உணர்த்திக்கொண்டே இருக்கிறது.புலம்பெயர்ந்ததால்தான் என்னவோ தாய்மொழியான தமிழின்மேல் அதிகமான பற்று ஏற்பட்டது. உறவுகளோடு இருக்கும்போது தென்படாத பாசம் உறவுகளைப் பிரிந்து வெளிநாட்டில் வாழும்போது அதிகமாக தென்படுவதில்லையா? அதைப்போல் இந்த மிகையான தமிழ்ப் பற்றையும் சொல்லலாம். இப்பற்றின் வெளிப்பாடாக கவிதை, கட்டுரை, கதைகள் என பல எழுதினான். அவற்றை அவன் குடியேறிய நாட்டின்இதழ்கள் வெளியிட்டன.தொடர்ந்தும் எழுதிவருகின்றான் அங்குள்ளதமிழ் அமைப்புக்களில் சிறு சிறுதொண்டாற்றுகிறான். தவிர மேடைப் பேச்சு, பட்டிமன்றம், கவியரங்கம் போன்ற நிகழ்வுகளிலும் பங்கேற்பான். தமிழ்சார்ந்ததொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது கலந்து கொள்வதும் உண்டு.அவன் பிறந்த ஊரில் வட்டார வழக்கில் ஒரு சொலவடை சொல்வார்கள். எல்லோரும் தேங்காயை உடைக்கும்போது நாம் சிரட்டையையாவது உடைக்க வேண்டும் என்பதுதான் அந்ந சொலவடை. சிரட்டை என்பது தேங்காயை உடைத்து துருவியபின் எஞ்சியிருக்கும் தேங்காய் மூடியாகும். அதேபோல் எல்லோரும் ஏதேதோ செய்யும்போது குறைந்த பட்சம் நாமும் ஏதாவது ஒன்றைச் செய்யலாமே என்று எதை எதையெல்லாமொ செய்யும் முயற்சியில்இறங்கியிருக்கிறான்.நல்ல மாடு சந்தையில் விலைபோகும் என்ற நம்மிக்கைதான். அவன் இவன் என்றால் அது எவன்? என்று நீங்கள் நினைப்பது அவனுக்கு புரிகிறது. அந்த அவன் இவனெல்லாம் வேறு எவனுமில்லை. அவனுக்குள் மறைந்திருக்கும் நான்தான் என்று கதையை முடித்தான்.-சங்கர சுப்பிரமணியன்.
![]()