கட்டுரைகள்

வாசிப்பு அனுபவமும் அதன் ஊடாக தேடலும்?…. தேடல்…..1…. சங்கர சுப்பிரமணியன்.

வாசிப்பு என்பது ஒரு பொழுதுபோக்கு. இதைப்போன்ற எண்ணற்ற பொழுதுபோக்குகள் உள்ளன. சான்றாக இதுவும் ஒரு திரைப்படம் பார்பதைப் போன்றோ தொலைக்காட்சியை பார்ப்பது அல்லது வானொலி கேட்பது போன்றோ
ஒன்றுதான். அப்படி திரைப்படத்தை பார்க்கும்போதும் அல்லது வானொலி
கேட்கும் போதும்  அதன் ஊடாக ஒரு அனுபவத்தைப் பெறுகிறோம். இவற்றிற்கு செலவிடும் நேரத்திற்கு ஏற்றபடி பெறும் அனுபவத்துக்கு வேண்டுமென்ன்றால்
விகிதாச்சாரத்தில் வேறுபாடு இருக்கலாம்.
ஒரு திரைப்படத்தையோ அல்லது விளையாட்டுப் போட்டியையையோ தனித்தோ, குடும்பத்தோடோ அல்லது நண்பர்களோடோ சேர்ந்தும் பார்க்கலாம். அவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரு பொழுதுபோக்கை பார்க்கும்போது அதில் தமக்குத் தெரிந்த நிறைகுறைகளை அவர்களுக்குள் பேசிக்கொள்வார்கள். இது யதார்த்தமாக வாழ்வில் நடக்கும் நிகழ்வு. இதற்காக ஒரு திரைப்படத்தைப் பார்தவர்களோ அல்லது ஒரு விளையாட்டுப் போட்டியைப் பார்தவர்களோ சிலர் சேர்ந்துகொண்டு பெற்ற அனுபவத்தை திட்டமிட்டு பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு நடைபெறுகிறதா?
புதிதாக நூல்வெளியடும்போது வேண்டுமானால் அந்த நூலை முன்கூட்டியே சிலரிடம் கொடுத்து வாசிக்கச் சொல்லி அந்த நூலை வெளியிடும்போது அவர்களது விமர்சனத்தை விழாவில் சொல்வதற்கு ஏற்பாடு செய்யலாம். இப்படி ஒரு சிலர் விமர்சனம் செய்து ஒரு விழாவில் வெளியிட்ட நூலை படித்தவர்கள் சிலர் சேர்ந்து கொண்டு தங்களுக்குள் தனித்தனியாக மற்றொரு விமர்சனத்தை ஒரு இடத்தில் இருந்துகொண்டு மீண்டுமொரு செய்வதுதான் வாசிப்பு அனுபவம்.
இப்போது நூல்வெளியீடே மாற்றுருவம் பெற்றுள்ளது. அவரவர் விருப்பம்போல் வெளியிடுவது என்ற நிலை உருவாகியுள்ளது. அதிலொன்றும் தவறில்லை. மாற்றம் ஒன்றுதான் மாறாதது. சமீபத்தில் ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்றருந்தேன். வழக்கமாக சிறப்புப் பிரதியைத்தான் முதலில் வெளியிடுவார்கள். ஆனால் அவ்விழாவில் ஒரு குறிப்பிட்ட பணியினர் பணிக்கு செல்லவேண்டும் என்பதற்காக அவர்களுக்கே முதலில் பிரதிகள் வழங்கப்பட்டன.
தட்டு என்னுடையது. அதில் பறிமாறப் பட்டிருக்கும் உணவும் என்னுடையது. வாடகை வீடென்றாலும் வீடும் என்னுடையது. அதில் நான் நின்றுகொண்டு சாப்பிட்டால் என்ன? உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டால் என்ன? என்றால் அதை நாம் தப்பாக எடுத்துக் கொள்ளமுடியாது. அதையும் அவர் சொல்லிக் கொண்டு இப்படித்தான் செய்வேன் என்று செய்யும்போது ஏற்றே ஆகவேண்டும்
வாசிப்பு என்பது ஒரு தொகுப்பையோ ஒரு நவீனத்தையோ வாசிப்பதுதான் வாசிப்பு என்று பலர் நினைக்கிறார்கள். நாளிதழ்கள், வார மற்றும் மாத இதழ்கள், இணைய இதழ்கள் என்று வாசிக்க எத்தனையோ உள்ளன. சிலர் குறைவாகவும் சிலர் அதிகமாகவும் அவரவர் தேவைக்கு ஏற்ப உணவு உண்பார்கள். அதிகமாக உண்டால் தான் ஆரோக்கியமுடன் வாழமுடியும் என்பது பொருளல்ல. குறைவாக சத்தான உணவை உண்டாலும் ஆரோக்கியமாக வாழலாம்.
நான் ஒரு கட்டுரையை வாசித்தபோது அதன் கட்டுரையாளர் எத்தனையோ துறைசார்ந்த பணியாளர்கள் அவர்களை மேம்படுத்திக் கொள்ள அவர்கள் துறை சார்ந்த செய்திகளை நாள் தோறும் வாசித்துக் கொண்டேயிருக்கிறார்கள் என்றும் அதுவும் ஒரு வாசிப்புதான் என்று எழுதியிருந்தார்.
அவர்களின் பணிகளுக்கிடையே அவர்களை மேம்படுத்துவதற்கு வாசிக்கவே நேரம் கிடைப்பதில்லை. எனவே அவர்களைப் பொருத்தமட்டில் அதுவும் வாசிப்புத்தான்.
விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக ஐந்து ஆண்டுகளாக கல்கியில் வந்த பொன்னியின் செல்வனின் கற்பனைக்கதையை ஐந்து மணிநேரத்தில் இரண்டு பாகமாக திரைப்படத்தில் பார்த்துவிடுகிறோம். அது ஒரு சிறந்தபடைப்பு என்பதற்காக ஐந்து பாகங்களையும் ஒவ்வொரு பாகத்தையும் படித்து வாசிப்பு அனுபவப்பகிர்வை நடத்த முயன்றால் அதில் விருப்பமுடையவர்களே முழு ஈடுபாட்டோடு நடத்த முற்படுவார்களா என்பது சந்தேகமே. இந்த பாகங்கள் முதன் முதலில் நூலாக வந்தவுடன் வாசித்தவர்கள் வாசிப்பு அனுபவப் பகிர்வை நடத்தியிருப்பார்களா?
இந்த நாவலை ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக வாசித்திருப்பார்கள். வரலாற்றுப் புரட்டுக்கள் மிகுந்திருந்தாலும் பரவாயில்லை இளந்தலைமுறையினருக்கு சிறிதளவாவது நம் வரலாற்றைக் கற்பிக்கலாம் அப்படியே அதில் எங்கு புரட்டு நடந்திருக்கிறது? வரலாற்றை திசைதிருப்ப எதனால் கற்பனை கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது? இதனால் யாருக்கு என்ன நன்மை? என்பதைக் கட்டுடைக்க நல்லுள்ளம் கொண்டு வாசிப்பு அனுபவம் உலகளவில் எங்காவது நடைபெறுகிறதா? என்று பார்ப்போம்.
இப்படிச் சொல்லும் நீங்கள் உலக அளவில் பொன்னிசெல்வன் திரைப்படம் சக்கைப்போடு போடுகிறதே என கேட்கலாம். திரைப்படம் என்றால் எப்படிப்பட்ட படம் என்றாலும் தமிழர்
பார்ப்பர். இதில் விதிவிலக்கு கிடையாது.
கர்ணன் திரைப்படத்தில் வரும் மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா என்ற பாடலில்
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன் என்று ஒரு வரி வரும். அதன்பின் இன்னும் சிலவரிகள் கண்ணனே காட்டினான் கண்ணனே தாக்கினான் கண்ணனே கொலை செய்கின்றான் என்றும் வரும்.
இங்கேயும் அதுதான் நான் நடந்தேறியிருக்கிறது. தமிழ், தமிழர் காதல், தமிழர் வீரம் மற்றும் தமிழர் பண்பு என்று ஒருபுறம் மார் தட்டிக் கொண்டே மறுபுறம் தமிழர் வரலாற்றை சீர்குலைப்போம். அதாவதா கர்ணன் திரைப்படப் பாடலைப்போல தமிழரே பணம் கொடுப்போம், தமிழரே கதை செய்வோம், தமிழரே படம் எடுப்போம் தமிழரே வரலாற்றை இழிவும் செய்வோம் அல்லவா? இதில் நாடுகடந்த ஒற்றுமை உள்ளது என்று பெருமையடையலாம்.
வேதனையிலும் சாதனை படைப்பவர்
தமிழரன்றி யாருளர்? தமிழர் என்ன படமெடுக்கின்றனர் என்று சொல்லிக் கொண்டே தமிழினம் கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டே கல்லெறிகிறது. முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்துவிட்டு வந்து கமல்ஹாசன் போல் மீசையை முறுக்குகிறது. வஞ்சகப் பேய்கள் என்பார் அந்த கிணற்றில் என்பார் இந்த குளத்தில் என்பார். நெஞ்சு பொறுக்குதில்லையே என்று நான்
சொல்லமாட்டேன். ஏனென்றால் அத்தமிழரில் நானும் ஒரு அங்கம்தான்
சிலவற்றை யாரோ தொடங்க அது சமூகத்தில் பின்னிபிணைந்து நீக்கமற நிலைத்துவிடுகிறது. சான்றாக காபி, மது, மற்றும் புகையிலை போன்றவற்றைக் கூறலாம். இன்னொன்றையும் இங்கு ஆணித்தரமாக குறிப்பிடலாம். கிரிக்கெட் எனும் துடுப்பெடுத்தாடும் விளையாட்டு. ஆங்கிலேயர் கண்டுபிடித்த விளையாட்டு
அவர்கள் ஆண்ட நாடுகளில் எல்லாம் அறிமுகப் படுத்தப்பட்டது.
-சங்கர சுப்பிரமணியன்.
(தேடப்படும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button