திருமணமான பெண்ணுடன் ஓட்டம் பிடித்த மடாதிபதி!
ராம்நகர் மாகடியின் சோலுார் கத்துகே மடத்தின் மடாதிபதி, கடிதம் எழுதி வைத்து விட்டு, திருமணமான பெண்ணுடன் தப்பியோடி விட்டார்.
ராம்நகர் மாகடியின், சோலுாரின் கத்துகே மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன், சிவானந்த சுவாமிகள்,25, நியமிக்கப்பட்டார்.
இதற்கு முன் இவருக்கு, திருமணமான பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மடாதிபதி, கடிதம் எழுதி வைத்து விட்டு, மடத்திலிருந்து அந்த பெண்ணுடன் ஓடிவிட்டார்.
பெண் காணாமல் போனது குறித்து, தாவரகரே போலீஸ் நிலையத்தில் புகார் பதிவாகியுள்ளது. ஆனால் மடாதிபதி காணாமல் போனது குறித்து, புகார் பதிவானது பற்றி தெரியவில்லை.
அவர் எழுதி வைத்த கடிதத்தில் கூறியதாவது:நான் என் சன்னியாச வாழ்க்கையை விட்டு விலகுகிறேன். ஏனென்றால் என் வாழ்க்கையில் நிம்மதி இல்லை. எனவே இதை விட்டு வெளியேறுகிறேன்; என் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணம், உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்.
என்னை தேட முயற்சிக்க வேண்டாம். முயற்சித்தால் என் பிணத்தைத்தான் பார்ப்பீர்கள். நான் கழற்றிய காவி உடையை, இனி எப்போதும் அணியமாட்டேன். என் வழியில் செல்ல விட்டு விடுங்கள். எங்கோ நான் நிம்மதியாக இருப்பேன்.
என்னை மீண்டும் இந்த வாழ்க்கைக்கு இழுத்து வராதீர்கள். இழுத்து வந்தால் என் இறப்பை பார்க்க வேண்டி வரும். என்னை அனைவரும் மன்னித்து மறந்து விடுங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
![]()