20 ஆண்டுகளாக மாதவிடாயால் அவதியுற்ற ஆண்.. சீனாவில் நடந்த ஷாக் சம்பவத்தின் பின்னணி!

வெகு நாட்களாகவே சிறுநீர் கழிக்கும் போது ரத்தம் வருவதாக கூறி மருத்துவரை சென்று பார்த்த நபருக்கு கருப்பையும், இனப்பெருக்க உறுப்பும் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவம் சீனாவில் நடந்திருக்கிறது.

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த 33 வயது நபரை குரோமோசோம் பரிசோதனைக்கு உட்படுத்தி பார்த்ததில், உயிரியல் ரீதியாக அவர் பெண்ணாக இருக்கிறார் என மருத்துவர்களுக்கு தெரிய வந்திருக்கிறது.

பருவம் அடைந்த சமயத்தில் சென் லிக்கு (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) ஒழுங்கற்ற சிறுநீர் தொல்லை இருந்ததால் அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டிருக்கிறது. அதன் பிறகு சிறுநீர் கழிக்கும் போது வயிற்று வலியும், ரத்தப்போக்கும் இருந்து வந்திருக்கிறது.

4 மணிநேரத்துக்கு மேல் சென் லிக்கு வயிற்று வலி நீடித்திருந்ததால் அப்போது அவருக்கு குடல் அழற்சி நோய் (appendicitis) இருப்பதாக அறிந்து அதற்கான சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் சென் லிக்கு இருக்கும் உபாதைக்கு தீர்வு கிடைத்தபாடில்லை.

இந்த நிலையில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போதுதான் சென் லிக்கு உண்மையே தெரிய வந்திருக்கிறது. அதன்படி, அவருக்கு பெண்ணுக்குண்டான பாலியல் குரோமோசோம்கள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், சென் லிக்கு பெண்ணுக்கான கருப்பை உள்ளிட்ட இனப்பெருக்க உறுப்புகளும் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

மேலும், ஆண்களுக்கான ஆண்ட்ரோஜனின் அளவு சராசரிக்கும் குறைவாகவும், பெண் பாலின ஹார்மோன்கள் மற்றும் கருப்பை செயல்பாடுகளின் அளவு ஆரோக்கியமான வயது வந்த பெண்களிடம் காணப்படுவதை போல இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இறுதியில், சென் லிக்கு ஆண் மற்றும் பெண்ணுக்கு இருக்கும் இனப்பெருக்க உறுப்புகள் இருப்பது தெரிய வந்ததும் மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாகியிருக்கிறார். மேலும் கடந்த 20 ஆண்டுகளாக சிறுநீர் கழிக்கும் போது சென்லிக்கு வந்த ரத்தமும், வயிற்று வலிக்கும் மாதவிடாய் காரணமாக இருந்திருக்கிறது.

இதனையடுத்து தனது பெண் இனப்பெருக்க உறுப்பை அகற்ற சென் லி முடிவு செய்ததால் கடந்த மாதம் அவருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை மூலம் அவரது கருப்பை அகற்றப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக பேசியுள்ள அறுவை சிகிச்சை நிபுணர் லுவோ ஜிபிங், சென் லி “சீக்கிரமாகவே நிம்மதியடைந்தார் மற்றும் அவரது நம்பிக்கையும் மீட்டெடுக்கப்பட்டது” என்று கூறினார்.

தொடர்ந்து, “இந்த கட்டத்தில் இருந்து, அவரால் ஒரு மனிதனாக வாழ முடியும், ஆனால் அவரால் இனப்பெருக்கம் செய்ய முடியாது, ஏனெனில் அவரது விதைப்பை விந்தணுக்களை உற்பத்தி செய்ய முடியாது,” என்று மருத்துவர் கூறியதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.

ஒருவரின் டீனேஜ் வயதிலேயே இந்த நிலை பெரும்பாலும் கண்டறியப்படுகிறது என்று லுவோ கூறினார். இந்த நிலை ஒருவரின் உடல் ஆரோக்கியத்தில் சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அது உளவியல் அதிர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், சீனாவில் 25 வயது பெண் கணுக்கால் காயத்துடன் மருத்துவரைச் சந்தித்தபோது, ஆண் குரோமோசோம்களுடன் பிறந்தது கண்டறியப்பட்டது. தனக்கு மாதவிடாய் வரவில்லை என்றும், வெட்கத்தால் இந்த உண்மையை மறைத்ததாகவும் அப்பெண் ஒப்புக்கொண்டதாகவும் அந்த செய்தி மூலம் அறிய முடிகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button