கட்டுரைகள்

” நற்றுணையாவது நமச்சிவாயவே ” இருத்துவோம் சிவ நாமத்தை திருத்துவோம் மனமதை!… ஜெயராமசர்மா.

மனிதர்களை மாண்புடன் வாழச்செய்வதற்கு நல்ல நெறிகளைக் காட்டி நிற்கும் உன்னத பணியினை சமயம் ஆற்றி வருகிறது. சமயம் என்பது சமூகத்தின் ஆணிவேர் எனலாம்.காட்டில் விலங்குகளுடன்  வாழ்ந்த மனிதனின் வாழ்வில்  காலத்தின் மாற்றத்தினால்  ஏற்பட்ட  பலவித வளர்ச்சிப் படியில் சமயம் என்பது மிகவும்  உன்னதமானது உயர்ந்து என்று கருத முடிகிறது. விலங்குகளுடன் இருந்த மனிதன் விலங்காய் விளக்கமின்றி இருந்த மனிதன் விலங்கினத்தினின்று வேறுபட்டு மாறுபட்டு நிற்பதற்கு சமயமும் அது சார்ந்த கொள்கைகளும் மடை  மாற்றம் செய்திருக்கின்றன என்பது  றுத்துவிடக்கூடியவிடயமன்று  எனலாம்.

  உலகின் தொன்மையான சமயம்,  சனாதனதர்மம் ,  பல வாழ்வியல் கோட் பாடுகளைத் தன்னகத்தே கொண்ட சமயம் நமது சைவசமயம் எனும் பொழுது நாமெல்லாம் எவ்வளவு பெருமை கொள்ளுதல் வேண்டும் !  பக்திப் பாடல்களை கொண்டிருக்கும் சமயம்கூட எங்கள் சைவசமயமே ஆகும்.! இசையினால் இறைவனை அடையலாம் என்னும் பாங்கில் பண்கள் பல கொண்ட பக்திப் பனுவல்களை தன்னகத்தே வைத்திருக்கும் சமயமும் எமது சைவசமயமே ஆகும். ! 

    எங்கள் சைவசமயம் இறை வழிபாட்டினை இலகுவாக்குவதற்கு பல சுலபமான வழிகளையெல்லாம் காட்டியிருக்கிறது. அவ்வழிகள் யாவுமே ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என்பதுதான் மிகவும் முக்கியமாகும். உணவு என்பது மிகவும் முக்கிய மானது. அதேவேளை அந்த முக்கியமான உணவுகூட  எங்களின் உள்ளத்தை உடல் நலத்தைக் கூடப் பாதித்தும் விடலாம். அதனால் உணவின் அளவைக் குறைத்தலும்சிலவேளை தவிர்த்தலும் வாழ் வில் நல்ல ஆரோக்கியத்துக்கும் நல்ல சிந்தனைக்கும் கூட ஆதாரமாக அமையலாம் என்பதை எமது சமயம் உணர்ந்த காரணத்தால் உணவினை ஒறுத்து இருப்பதை  ” விரதம் ” என்று உயர்வு கொடுத்து அதனுடன் தெய்வீகத்தையும் தொடர்பு படுத்தி வாழ்வியலில் முக்கிய நடைமுறை ஆக்கிவிட்டது. அந்த வகையில் சிவராத்திரி விரதம் மிகவும் முக்கியத்துவமும் பெருமையும் உடையதாக சைவர்களால் கருதப்படுகிறது.

    பசித்திரு – தனித்திரு – விழித்திரு. இவை தத்துவார்த்தமான பதங்களாகும். சொல்லுவதற்கு கவிதை நடை போல இருந்தாலும் உயரிய பொருளினை உள்ளடக்கி நிற்கிறது என்பதைக் கருத்திருத்த வேண்டும். பசித்திருவில் – பதனித்திருவில் – த விழித்திருவில் – வி இம்மூன்று எழுத்தையும் சேர்த்தால்  வருவது ” பதவி ” என்னும் சொல் லாகும். பசித்து தனித்து விழித்து இருந்தால் என்ன பதவி கிடை த்து விடும் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா பதவிகளுக்கெல்லாம் உயர்ந்த பதவி அதாவது இறைவனது அருள் என்னும் பதவி மனமாசு அகன்று மனம் மாண்புறும் பதவி ஆணவமெனும் அழுக்கு அகன்று ஆண்டவன் நினைப்பு அகத்தில்எழுந்திடும் பதவிஎன்று பல பதவிகள் எமக்கு வாய்க்கும் என்று எமது சைவசமயம் எடுத்து இயம்பி நிற்கிறது.

   சிவராத்திரி நோன்பு காலத்தில் ஆலயத்துக்குச் சென்று அரட்டை அடிப்பதோ வீண் வம்புகள் பேசுவதோ மற்றவரைக் குறை சொல்லு வதோ  தவிர்க்கப்பட வேண்டியதாகும். தனித்திருங்கள். புசிப்பதைத் தவிருங்கள். இறை எண்ணத்துடன் இறை புகழ் பாடி விழித்திருத் திருங்கள். இப்படி இருப்பதுதான் சிவராத்திரிக்கு நமது சமயம் கொடுக் கும் முக்கியத்துவம் எனலாம். 

    விழித்திருக்க வேண்டும் என்பதற்காக சினிமாப் படங்களைப் பார்ப்பதோ நாடகங்களைத் தொலைக்காட்சியில் பார்ப்பதோ , சீட்டாடுவதோ , களியாட்ட விடுதிகளை நாடுவதோ , முறையல்ல. விழிப்பது முக்கிய மானதுதான். ஆனால் அந்த விழித்திருக்கும் நேரத்திலும் இறை நினைப்பாய் இருப்பதுதான் விழிப்புக்கு உரிய அர்த்தமாய் அமையும் என்பதையும் யாவரும் கருத்தில் இருத்துவது அவசியமாகும். 

    கருடபுராணம்அக்னிபுராணம்அருணாசலபுராணம்சிவராத்திரி புராணம் யாவும் சிவராத்திரியைப் பற்றி அதன் மகிமைகள் பற்றி யெல்லாம் எடுத்தியம்புகின்றன. ஆலகால விஷத்தை ஈசன் உண்ட  நிகழ்ச்சியும்அடிமுடி தேடிய பிரம்மா விஷ்ணுவுக்கு ஒளிப் பிளம்பாக காட்சி கொடுத்த சம்பவமும்அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற்றதும்கண்ணப்பர் ஈசனுக்குத் தனது கண்ணைப் பிடிங்கி அப்பியதும் அதனால் கண்ணப்பன் மோட்சம் பெற்றதும் மார்க்கண்டேயருக்காக ஈசன் எமனைக் காலால் உதைத்ததும்குபேரன் செல்வந்தனாகியதும்என்று பல அற்புதங்கள் நிகழ்ந்த தினமாக சிவராத்திரி விளங்குகிறது என்னும் நம்பிக்கை பலகாலமாக இருப்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும். 

    மாதம் மாதம் சிவராத்திரி வருகிறது. ஆனால் மாசிமாதத்தில் வருகின்ற சிவராத்திரியைத்தான் ” மகாசிவராத்திரி ” என்று உயர்வுடன் அனுட்டிக்கின்றோம் . மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதற்கு புராணக் கதைகளை விட அறிவியல் ரீதியான விளக்கமே அனைவருக்கும் பயனை நல்கும் அல்லவா ஆன்மீகம் என்பது வெறும் வார்த்தை அல்ல. ஆன்மீகம் அறிவியலுடன் இணையும் பொழுதுதான் அதன் உன்னதம் உயர்வடை கின்றது. அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்தே எங்கள் சமயம் தன்னை நிலைநிறுத்தி வருகிறது என்பதை மறுத்துவிட முடியாது. அந்த வகையில் மாசியில் வருகின்ற சிவராத்திரி ” மகா ” என்னும் உயர்நிலை எய்துவதற்கு உரிய காரணத்தை அறிவது அவசியம் அல்லவா 

     ஈத்தர் என்னும் சக்தி உலகத்தை இயக்குகிறது என்று அறிவியல் சொல்லுகிறது. இந்தச் சக்தியானது உலகம் முழுவதும் அண்டம் முழுவதும் நிறைந்தே இருக்கிறது. இந்தச் சக்தியானது பூமியை  நோக்கி ஒவ்வொரு வினாடியும் வந்துகொண்டே இருக்கிறதாம்.

   பூமியானது சூரியனை சிறிய நீள்வட்டப் பாதையிலும் பெரிய நீள்வட்டப் பதையிலுமாக இரண்டு பாதையில் சுற்றி வருகிறது. இவ்வாறு பூமி சுற்றி வரும்பொழுது பெரிய நீள்வட்டப் பாதையில் இருந்து சிறிய நீள்வட்டப் பாதைக்கு மாறுகின்ற நேரம்தான்                       ” மகாசிவராத்திரி ” வரும் நேரமாக அமைகிறது. ஈத்தர் சக்தியானது எப்பொழுதுமே பூமியை நோக்கி வந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் சிவராத்திரியில் ஈத்தர் சக்தியின் அளவு அதிகமாகவே இருக்கும். ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் மாசி மாத சிவராத்திரியில் மட்டுமே  ஈத்தர் சக்தியின் அளவு அபரிதமாக இருக்கும். இப்படி அபரிதமாக இம்மாதத்தில் வருடத்துக்கு ஒருமுறை அமைவதால் இக்காலத்து வருகின்ற சிவராத்திரியை ” மகாசிவராத்திரி ”  என்று உயர்வுடன் போற்றும் நிலை ஏற்பட்டது என்பதை யாவரும் கருத்திருத்தல் அவசியமானதாகும் .  

   மாசிமாதத்தில் வருகின்ற ஈத்தருக்கு அதிக சக்தி காணப்படுகிறது. ஈத்தர் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நகரும். பூமியானது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சுற்றிக் கொண்டிருக்கும். எனவே நேரடியாக முழுச் சக்தியும்  கிடைக்கும் நிலை இந்த மகா சிவராத்திரி க்கே வாய்க்கிறது. 

      மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து கண்விழித்து முதுகை நேராக வைத்து தியானம் செய்யும் பொழுது ஈத்தர் உச்சந்தலையில் உள்ள சகஸ்ரார சக்கரத்தின் வழியாக பீனியல் கிளாண்ட்  என்ற ஆனந்த சுரப்பி  மூளையை அடைந்து பல வித நல்ல ஹார்மோன் களைச் சுரக்கச் செய்கிறது. இந்த நேரத்தில் நமக்கு நாமே

ஆசீர்வாதம் ( Self Blessing )  செய்து கொள்ளும் பொழுது இது நமது டி என் ஏ  ( DNA )  ல் கெட்ட பதிவுகளை ( கர்மா ) அழிக்கும் வல்லமையை உருவாக்குகிறது.

      ஈத்தர் சக்தி என்பது பகலிலும் உண்டு. இரவிலும் உண்டு. பகலில் சூரிய வெளிச்சம் காரணமாக சற்றுக்குறைவாகவே காணப்படும். ஆனால் இரவில் சூரிய வெளிச்சம் காணப்படாமையினால் ஈத்தர் சக்தியின் அளவு அதிகமாகவே இருக்கும். 

இரவு ஒன்பது மணி தொடக்கம் அதிகாலை இரண்டு மணிவரை உடலின் இயக்கமும் வித்தியாசமாய் இருக்கும். இவ்வேளை ஈத்தர் சக்தியின் அளவும் கூடதலாகவே அமையும் நிலை காணப்படுவதால் இவ்வேளையிலே கட்டாயம் விழித்திருப்பது அவசியமாகிறது. எனவேதான் மகாசிவராத்திரியின் முக்கிய சாமமாக இந்த நேரம் எமது சமய ரீதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

சிவன் என்றால் மங்களம் என்பது பொருளாகும்.அந்த மங்களமான சிவனைக் குறிப்பதுதான் சிவராத்திரி. எம்மை யெல்லாம் இயக்கிக் கொண்டிருக்கும் ஜீவனுக்கும் ஒரு பற்றுக்கோடு தேவையாகின்றது. அந்தப் பற்றுக்கோடாக விளங்கும் ஆற்றல்தனைத்தான்  சிவன் என்கிறோம்.இந்தச் சிவனை உருவமாய்அருவமாய் அருவுருவமாய் வழிபடுகிறோம். இது சிவ வழிபாட்டில் அமைந்திருக்கும் சிறப்பெனலாம்.

     சிவனுக்கு உகந்த மந்திரமாய் பஞ்சாட்சரம் மந்திரம் விளங்கு கின்றது என்று அருளாளர்கள் எடுத்து மொழிந்திருக்கிறார்கள். சம்பந்தர் தொடக்கம் மணிவாசகப் பெருமான், திருமூலர். அருணகிரி நாதர்வரை சொல்லி இருக்கிறார்கள்.சைவசித்தந்தமே நமச்சிவாய என்னும் நாமத்தைப் பெரிதும் போற்றி அதற்கெனப் பல தத்துவார்த் தங்களையெல்லாம் வெளிப்படுத்தி நிற்பதையும் காணமுடிகிறது எனலாம்.

” வேதம் நான்கினும் மெய் பொருளாவது

நாதன் நாமம் நமச்சி வாயவே “

 

” நற்ற வாவுனை நான்ம றக்கினும்

சொல்லும் நாநமச்சி வாயவே “

 

” நமச்சிவாய வாழ்க “  இந்த வார்த்தை சிவனைக்குறிக்கும் சக்தி மிக்க வார்த்தையாகும்.

  நமசிவாய என்பதற்கு – சிவனை வணங்குகிறேன் என்பது அர்த்தமாகும்.இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் வாழ்வில் நலம் பெருகும். மனம் வெளிக்கும். சிவனின் அருள் என்றுமே துணையாகி நிற்கும்,

ந – என்றால் திருவடி

ம – என்றால் திரு உந்தி

சி – என்றால் திருத்தோள்கள்

வா – என்றால் திருமுகம்

  – என்றால் திருமுடி

  இதுதான் நமசிவாய என்பதன் பொருளாகி சிவப் பரம்பொருளை நினைவூட்டி நிற்பதாகும். இம்மந்திரதை உச்சரித்தால் உலக இன்பங்கள் கிடைக்கும். நலம் பெருகும்.ஞான மார்கத்தின் முதற்படிக்கு எம்மையெல்லாம் இட்டுச் செல்லும்.ஆகவேதான் அடியார்கள் இம்மந்திரத்தை உயிரெனப் போற்றினார்கள் என்பதை மனமிருத்தல் அவசியமாகும். சிவராத்திரியில் இந்தச் சக்திமிக்க சித்திவழங்கும் ” நமச்சிவாய ” என்னும் நாமத்தை மறவாமல் மனமார நினைந்து வாயாலே உச்சரித்தால் நிச்சயம் பரம்பொருளான அந்தச் சிவனின் அருள் கிட்டுவதோடு எமது அழுக்கான மனமெல்லாம் அழுக்ககன்று ஆண்டவனின் நினைப்பு நிச்சயம் அமரும் என்பதை அனைவரும் அகமிருத்துவோம்.

    எமது சமயம் நல்ல நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்த சமயமாகும். ஒவ்வொரு செயலுக்கும் சிறப்பான காரண காரியங்கள் இருக்கின்றன. அவற்றை சரியான முறையில் விளங்கிக் கொண்டு விட்டோமானால் மனதில் ஐயம் என்பது அகன்றே ஓடிவிடும். ஐயந் தெளிதல் வேண்டும். ஐயம் தெளிந்தால் ஆண்டவன் அருளும் எமக்கு வாய்த்துவிடும். சிந்தையினை தெளிவாக்கல் சிவன் அருள் பெற வழியாகும். சிவராத்திரி நன்னாளில் சிந்தையைத் திருத்திட சிவனை வேண்டுவது எமது தலையாய பணியாகும்.

 

         ” சொற்றுணை வேதியன் சோதி வானவன்

           பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

           கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

           நற்றுணை யாவது நமச்சி வாயவே “

          ” சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்

            நலமில னாடொறு நல்கு வானவன்

            குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்

            நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே ” 

         ”  இல்லக விளக்கது விருள் கெடுப்பது

           சொல்லக விளக்கது சோதி யுள்ளது

           பல்லக விளக்கது பலருங் காண்பது

           நல்லக விளக்கது நமச்சி வாயவே ” 

 

                   ”  நற்றுணையாவது நமச்சிவாயவே “ 

        இருத்துவோம் சிவ நாமத்தை திருத்துவோம் மனமதை  !

 

                          மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

                            முன்னாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர் 

                                    மெல்பேண் … ஆஸ்திரேலியா 

 

 

 

 

   

 

          

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button