கவிதைகள்

அவலநிலை போக்குதற்கு ஆண்டவனே வழிகாட்டு !…. கவிஞர். மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

 கட்டி   அணைத்தோம் 

          கைகுலுக்கி   மகிழ்வடைந்தோம் 

          இட்டமுடன்    உணவுகளை 

          எடுத்துண்டு இன்புற்றோம் 

          கட்டி அணைத்தவரை

          கைகுலுக்கி நின்றவரைtam

          எட்டவே நில்லென்று

          எச்சரிக்கை செய்கின்றோம் !        

 

          கைதந்தால் ஓடுகிறோம்

          கால்பட்டால் பதறுகிறோம் 

          முன்னின்று மூச்சுவிட்டால்

          பின்னோக்கி ஓடுகிறோம்

          தும்மல்வந்து விட்டாலே

          துடிதுடித்து நிற்கின்றோம்

          கொரனோவின் வில்லத்தனம்

          அளவின்றி பெருகிறதே ! 

 

          கொரனோவின் பரவலினால்

          கொள்கலங்கள் தடையாச்சு

          கடையெல்லாம் சனக்கூட்டம்

          பொருள்தேடி அலைகிறது 

          கல்விகற்கும் மாணவர்கள்

          கதிகலங்கி நிற்கின்றார்

          மெள்ளமெள்ள கொரனோவும்

          பள்ளிநோக்கி பார்க்கிறது   ! 

 

          வெளிநாட்டுப் பிரயாணம் 

          அத்தனைக்கும் வேட்டுவைத்து 

          உள்நாட்டு விழாவனைத்தும் 

          ஓரங்கட்டும் நிலையாச்சு 

          யாருக்கு வருமென்று 

          தெரியாத மாயமதாய்

          பாருக்குள் கொரனோவும்

     பாய்ந்துவிடத் துடிக்கிறது  !

 

           மக்கள்கூடும் இடத்தினிலே

           தன்மதிப்பைக் காட்டுதற்கு

           கொரனோவும் ஆவலுடன்

           கொடியெடுத்து நிற்கிறது 

           வீட்டுக்குள் இருந்துவிட்டால்

           வில்லனிடம் தப்பிடலாம்

           என்கின்ற அறிவுரையால்

           எல்லோரும் முடங்கிவிட்டார்  !

 

      ஆலையெலாம் மூடிவிட

      ஆலயங்கள் அடங்கிவிட

      அரக்கனென கொரனோவும்

      ஆர்ப்பரித்து எழுந்துவிட

      ஆர்வருவார் இடர்களைய

      என்றேங்கும் அகிலமக்கள்

      அவலநிலை போக்குதற்கு

      ஆண்டவனே வழிகாட்டு !

 

        

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *