ஜனாதிபதி மக்களைச் சந்திப்பதால் சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசு தயாராகி வருகிறதா?

ஜனாதிபதி தலைமையில் தேசிய மக்கள் சக்தியினால் நடத்தப்படும் பொதுக் கூட்டங்களுக்கும் சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பான கோரிக்கைகளுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக சர்ஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருகின்றதா? என்றும், தற்போது ஜனாதிபதித் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்கள் அதனுடன் தொடர்புடையதாக என்றும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்காமல் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லக்கூடிய முறைமை என்னவென்று மனுக்களை சமர்ப்பித்துள்ள ஜீஎல் பீரிஸ் போன்ற எவராவது முன்னரே கூறினால் அது பெறுமதியானதே. குறித்த மனுக்களை ஆராய்ந்து இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு மட்டும் போதுமானதா? அல்லது சர்வஜன வாக்கெடுப்பும் அவசியமா? என்று உயர்நீதிமன்றம் தீர்மானிக்கும். இதனை தவிர வேறு வழியில் சர்வஜன வாக்கெடுப்பை எவராலும் அறிவிக்க முடியாது. இன்று முதல் மூன்று வாரங்கள் இருக்கின்றன. உயர்நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு தீர்ப்பை வழங்கிய பின்னர் தெரிந்துகொள்வோம்.
இதேவேளை சர்வஜன வாக்கெடுப்புக்கு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமைக்கும், ஜனாதிபதித் தலைமையில் தேசிய மக்கள் சக்தியினால் நடத்தப்படும் கூட்டங்களுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. நாங்கள் கடந்த டிசம்பரில் கூட்டத்தை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தோம்.டித்வா புயலால் அது ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மார்ச்சில் நடத்த திட்டமிடப்பட்ட போதும் எரிபொருள் தொடர்பான பிரச்சினையால் அதுவும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கும் அரசியலமைப்பு திருத்தத்திற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது என்றார்.
![]()