முச்சந்தி

பாலியல் துஷ்பிரயோகத்தில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்க்கு முதலாம் திகதி வரை விளக்கமறியல்

அக்கரைப்பற்றில் அரச திணைக்களம் ஒன்றில் கடமையாற்றி வந்த பெண் அதிகாரி ஒருவரை திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் புதன்கிழமை (19) உத்தரவிட்டார்.

கடந்த காலத்தில் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராக சக்கி அதாவுல்லாஹ் செயற்பட்டு வந்த போது, அங்கு கடமையாற்றி வந்த அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த உத்தியோகத்தரான பெண் ஒருவரை திருமணம் முடிப்பதாக வாக்குறுதியளித்து தன்னை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில்,முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாட்டை தொடர்ந்து, அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினால் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான சக்கி அதாவுல்லாஹ், வாக்குமூலம் வழங்குவதற்காக அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு நேற்று முன்தினம் (18) செவ்வாய்க்கிழமை சென்றிருந்த நிலையில் அவரை அப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் தயானி கமகே தலைமையிலான குழுவினர் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவருக்கு எதிராக அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை (18) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை நேற்று புதன்கிழமை (19) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று புதன்கிழமை (19) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான் அவரை தொடர்ந்து எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button