உலகம்

சீன அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க 1.12 டிரில்லியன் டொலர் பாதுகாப்பு பட்ஜெட்: தைவான் முடிவு

தைவான் தன் தற்காப்பு ஆற்றலை வலுப்படுத்த உறுதியுடன் இருப்பதாகவும், அமைதியை நிலநாட்டுவதற்கான முதலீடாக எதிர்வரும் 2027-ஆம் ஆண்டில் நாட்டின் பாதுகாப்புப் வரவு செலவுத் திட்டம் சாதனை அளவில் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அந்நாட்டின் ஜனாதிபதி லாய் சிங்-தே (Lai Ching-te) திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

தைவான் அமைச்சரவை தனது அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டை வியாழக்கிழமை தாக்கல் செய்யவுள்ள நிலையில், பாதுகாப்புச் செலவினம் தொடர்பான முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளன.

சாதனைப் வரவு செலவு திட்டம்

2027-ஆம் ஆண்டிற்கான தைவானின் ஒட்டுமொத்த பாதுகாப்பு பட்ஜெட் முதன்முறையாக 1 டிரில்லியன் தைவான் டொலர்களைக் கடந்து, 1.1225 டிரில்லியன் தைவான் டொலராக (சுமார் 31.40 பில்லியன் அமெரிக்க டொலர்) இருக்கும் என ஜனாதிபதி லாய் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

“பாதுகாப்பில் முதலீடு செய்வது என்பது அமைதிக்கான முதலீடாகும். தைவான் நீரிணைப் பகுதியிலும் பிராந்தியத்திலும் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் பேண வலுவான ராணுவப் படையை தொடர்ந்து கட்டியெழுப்புவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தைவானைத் தனது சொந்தப் பிராந்தியமாகக் உரிமை கோரும் சீனா, ராணுவ மற்றும் அரசியல் அழுத்தங்களை அதிகரித்து வருகிறது.

அதேவேளை, தைவான் தனது தற்காப்பிற்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்கா விடுத்து வரும் கோரிக்கையை ஜனாதிபதி லாய் தீவிரமாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகிறார்.

சொந்தமாகவே நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவது உட்பட, அதிகரித்து வரும் சீன அச்சுறுத்தலுக்கு ஏற்ப ராணுவத்தை நவீனமயமாக்குவதை தைவான் அரசு முதன்மைக் கொள்கையாகக் கொண்டுள்ளது.

சீனாவின் புதிய உத்திகள்

சீன ராணுவம் தினசரி அடிப்படையில் தைவானை சுற்றியுள்ள வான் மற்றும் கடல் பகுதிகளில் ரோந்து செல்வதுடன், பசிபிக் பெருங்கடலில் உள்ள தைவானின் கிழக்குக் கடற்கரையில் கடலோரக் காவல் படை மூலம் சோதனை நடத்தும் புதிய உத்திகளையும் கையாண்டு வருகிறது.

தைவான் தனது வருடாந்திர ‘ஹான் குவாங்’ (Han Kuang) ராணுவப் பயிற்சியை அண்மையில் நிறைவு செய்தது. சீன கடல்வழி முற்றுகையை எவ்வாறு உடைப்பது என்பது போன்ற பல்வேறு போர்க்கால சூழல்கள் அதில் பயிற்சி செய்யப்பட்டன. எனினும், இப்பயிற்சியை சீனா “வீணான நாடகம்” எனக் விமர்சித்துள்ளது.

தைவான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையாக உள்ளதால், வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி லாய்க்கு சவால்கள் காத்திருக்கின்றன. அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஒப்புதல் வழங்க முடியாது என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button