22ஆவது திருத்தத்தை மகாநாயக்கர்கள் எதிர்க்கவில்லை!; மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்

22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தத்தின் முழுமையான உள்ளடக்கங்கள் தொடர்பாக மகாநாயக்க தேரர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளரே தவிர அதிருப்தியடைவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கான 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் அதிருப்தி வெளியிடுவதாகவும், அவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் வெளியாகும் செய்திகள் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அமைச்சர் மேலும் கூறுகையில்,
மகாநாயக்க தேரர்களால் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள விடயங்களை கருத்திற்கொண்டு 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் நீதிச் சேவை சட்டத் திருத்தத்தை தயாரிப்பதற்கு முன்னர் நாங்கள் மகாநாயக்க தேரர்களை சந்தித்து விளக்கினோம். எவ்வாறான விடயங்கள் இந்த திருத்தத்தின் மூலம் நடக்கவுள்ளது என்பது தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளோம். இதற்கு விருப்பம் தெரிவித்து அவர்கள் ஆசீர்வாதம் வழங்கினர்.
இதேவேளை 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் முழுமையான உள்ளடக்கங்கள் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் மகிழ்ச்சியையே வெளிப்படுத்தியுள்ளனர். இந்த திருத்தத்தின் ஊடாக மக்களின் வழக்குகள் வேகப்படுத்தப்படுமாக இருந்தால் 25 வருடங்களாக தொடரும் வழக்குகள் வேகமாக விசாரிக்கப்படுமாக இருந்தால், மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமாக இருந்தால் மற்றும் நீதித்துறை பாதுகாக்கப்படுமாக இருந்தால் மகாநாயக்க தேரர்களுக்கு பிரச்சினைகள் இருக்கவில்லை. ஆனால் நபரொருவரை இலக்காகக் கொண்டு இந்தத் திருத்தம் செய்யப்படுவதாக தவறான கருத்தை ஏதோவொரு குழு முன்னெடுப்பதனாலேயே பிரச்சினை ஏற்பட்டிருந்தது என்றார்.
![]()