போலி மணப்பெண்களால் ஏமாற்றப்படும் சீன ஆண்கள்

சீனாவில் திருமணத்துக்குப் பெண் கிடைக்காமல் ஏமாற்றமடையும் ஆண்களை இலக்கு வைத்து ‘உடனடித் திருமணம்’ (Flash Marriage) செய்து வைப்பதாகக் கூறி பல கோடி ரூபாய் பணத்தைச் சூறையாடும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அந்தப் பெண்கள் பணத்துடன் தப்பிச் செல்வதாகவும், தங்களின் உண்மைப் பின்னணி, வயது, கடன் விபரங்கள் மற்றும் முந்தைய திருமணங்களை மறைத்துப் பொய்யான தகவல்களை வழங்கி அவர்கள் ஏமாற்றியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ஆண்கள் கவலை வெளியிடுகின்றனர்.
பாதிக்கப்பட்ட ஆண்கள் கவலை
சீனாவில் பல தசாப்தங்களாக நடைமுறையிலிருந்த ‘ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை’ கொள்கை மற்றும் ஆண் குழந்தைகளுக்கான முன்னுரிமை காரணமாக, பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை சுமார் 30 மில்லியனால் அதிகரித்துள்ளது.
இதனால், கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகரங்களில் வாழும் ஆண்களுக்குப் பெண் கிடைப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. இதனைப் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சில திருமணத் தரகு முகவர் நிலையங்கள், ‘குறைந்த செலவில், குறுகிய காலத்தில் சிறந்த பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறோம்’ என விளம்பரம் செய்து ஆண்களைக் கவர்கின்றன.
தென்மேற்கு மாகாணமான கைசூவில் (Guizhou) இயங்கும் இவ்வாறான முகவர் நிலையங்களை நம்பிச் செல்லும் ஆண்கள், சில நாட்களிலேயே பெண்களுக்கு பெருந்தொகைப் பணத்தை வழங்கி அவசரத் திருமணம் செய்து கொள்ளும் நிலையில், திருமண்ம் ஆனதும் பெண்கள் , பணத்துடன் தப்பிச் செல்வதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான பல மில்லியன் யுவான் மோசடிகள் குறித்து முறைப்பாடுகள் குவிந்து வரும் நிலையில், சீனக் காவல்துறை மற்றும் சட்டத்துறை அதிகாரிகள் இணைந்து இத்தகைய போலியான திருமணத் தரகு முகவர் நிலையங்களுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் கடுமையான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
![]()